Saturday, February 8, 2025

விமர்சனம் - சில எண்ணங்கள்

 ( இரு ஆண்டுகள் முன்பு எழுதியது )

தூரன் விழாவில் பிகே ராஜ சேகரன் அவர்கள் உரையாடல் நிகழ்வில் அவரிடம் கேட்க பட்ட ஒரு கேள்வி மற்றும் அதற்கு அவர் அளித்த பதிலும் எனக்கு இப்போது வரை மனதில் தொடர்ந்து ஓடி கொண்டிருக்கிறது . தமிழகத்தில் இலக்கிய விமர்சகர் என்பவர் புனைவு எழுத்தாளராகவும் இருப்பது ஒரு கூடுதல் அம்சம் , விமர்சகர் எழுத்தாளராகவும் இருப்பதால் எழுத்தில் இருக்கும் அவரால் மேலதிகமாக சரியாக புரிந்து கொள்ள முடியும் என்ற ஒரு பொது எண்ணம் இருக்கிறது , இந்த பொது எண்ணம் மலையாள இலக்கிய உலகில் உள்ளதா ,இது பற்றிய உங்கள் கருத்து என்ன என்று கேட்க பட்டது . ராஜசேகரன் படைப்பாளி அல்ல , விமர்சன எழுத்தாளர் மட்டுமே என்பதால் இது அவரது நிலையை கேள்விக்கு உட்படுத்தும் கேள்வியாகவும் இது இருந்தது . அவர் இப்படியான எண்ணம் கேரளத்தில் இல்லை என்றார் , கேரள சூழலை சொன்னார் , புனைவு எழுதுவதும் ,விமர்சனம் எழுதுவதும் தனித்தனி பணிகள் , வேறுவேறு ஆட்கள் செய்ய வேண்டிய விசயம் என்று . எனக்கு அவர் சொன்னதில் பிடித்த அம்சம் என்பது அவர் அந்த கேள்விக்கு கடைசியாக சொன்ன என் விமர்சன கருத்தை சரி என்றால் ஏற்கவும் ,தவறு என்றால் நிராகரிக்கவும் செய்யலாம் , அவ்வளவுதான் , மாறாக விமர்சனம் எழுதியவர் பின்னணி என்பது தேவையற்றது என்று சொன்னது . ( அங்கு கேட்கப்பட்ட கேள்வி மற்றும் சொன்ன பதிலும் இதே வார்த்தைகளில் அல்ல ,அங்கு சொல்ல பட்டதை இவ்வாறு நான் புரிந்து கொண்டேன். ) 


உண்மையில் இந்த அவரது பதில் ( சரி என்றால் .. ) இலக்கியம் தாண்டி எல்லாவித விவாதங்களிலும் பொருத்தி பார்க்க முடியும் என்று தோன்றுகிறது . பெரும்பாலும் விவாதங்களில் ஒருவர் எடுக்கும் நிலைப்பாடுகள் , விமர்சனங்கள் ஏன் அந்த நிலைப்பாட்டை எடுக்கிறார்/ சொல்கிறார் என்று பார்ப்பேன் , 90% ஏதாவது தனிப்பட்ட வெளியே தெரியாத ஒரு காரணம் இருக்கும் ,அதை மறைத்து முன்வைப்பார்கள் . இது தாண்டி விவாதத்தில் பேச படும் விசயம் சார்ந்த அனுபவம் அல்லது அது சார்ந்த நுண்ணர்வு இல்லாமல் தட்டையாக புரிந்து கொண்டு முன் வைப்பவர்களும் இருப்பார்கள் . உண்மையில் இப்படி விவாதிப்பவரின் காரணங்கள் பார்க்க ஆரம்பித்து அதுவே ஒரு நோய்கூறு போல எனக்கு ஆகி விட்டது . இந்த மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும் என்று நினைத்தேன் .


இதற்கு ராஜ சேகரன் பதில் எனக்கு ஒரு திறப்பு அளித்தது. அதாவது இனி கேள்வியை ,விமர்சனத்தை மட்டுமே பார்க்க வேண்டும் , அதை சரி எனில் ஏற்கலாம் , தவறு எனில் கண்டு கொள்ளாமல் விட்டு விடலாம் என்று . உண்மையில் ஒவ்வொருவரும் இந்த நிலைப்பாட்டை கைக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது . விமர்சனம் மற்றும் கேள்விகள் எங்கிருந்து வந்தாலும் அதை தகுதி அற்ற ஒருவர் கேட்டாலும் அதன் பின்னணி பற்றி பார்க்காமல் அந்த விமர்சனம் / கேள்வி சரியா என்று மட்டும் பார்ப்பது என .


இது இன்னொரு விதத்திலும் எனக்கு பயன் அளிக்கிறது , எனக்கு நான் காணும் விசயங்களில் எனக்கு விமர்சனம் தோன்றினாலும் அதை முன்வைக்கலாமா , அதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா என்று யோசிக்காமல் என் கேள்வி / விமர்சனத்தை முன்வைக்க இயலும் , அது சரியாக இருக்கும் பட்சத்தில் அதற்கு ஏற்போ , மறுப்போ நிகழும் என .


மேலும் விமர்சனத்தை ,கேள்வியை எதிர்கொள்பவர் அதை சரி என்றால் ஏற்றுக்கொள்ளவும் , தவறு எனில் கண்டுகொள்ளாமல் விடவும் கொள்ளும் மனநிலை கொண்டிருப்பதே சரியான மனநிலை என்றும் தோன்றுகிறது . கேள்வி , விமர்சனம் வைப்பவரின் தகுதியை காண முற்படுவதே கர்வம் கொண்ட மனநிலை வெளிப்பாடு என்று தோன்றுகிறது . இது தவறு என்று சொல்ல வில்லை ,ஆனால் இப்படியான நிலையை எடுக்கும் போது தானாக அந்த விமர்சனத்தை நிராகரிக்கும் இடத்திற்கு வந்து விடுவார்கள் , அந்த விமர்சனத்தில் உண்மை உள்ளதா என்பதை காண விரும்பாத மனநிலைக்கு வந்து விட வாய்ப்பு உண்டு என்று தோன்றுகிறது ,இந்த எண்ணம் முழு சரி என்று சொல்ல வில்லை . 


அதேசமயம் எல்லா விமர்சனங்களும் சரியானவை என்று சொல்ல வர வில்லை , மொக்கையான எந்த புரிதலும் இல்லாத விமர்சனங்கள் நிறைய கொட்டி கிடக்கின்றன , இதில் இருந்து தப்பிப்பது என்பது தகுதியானவரின் விமர்சனங்களை மட்டுமே கவனிப்பது என்பதுதான் . நான் சொல்ல வருவது இதை காணும் மனநிலை சார்ந்து மட்டுமே , முன்முடிவுகள் இல்லாமல் ஒரு விமர்சனத்தை அந்த விமர்சனத்தில் இருக்கும் வார்த்தைகளை மட்டும் எடுத்து கொண்டு அது சரியா தவறா என்று அணுகி அதை ஏற்கவும் நிராகரிக்கவும் செய்யும் மனநிலை சரியானதாக இருக்கும் என .


Thursday, February 6, 2025

பாவம் ( குறுங்கதை)

 லக்ஷ்மி அம்மா பத்திரங்களை ஒவ்வொன்றாக காட்டி புலம்பி கொண்டிருந்தார் , சுகன் அவற்றை எல்லாம் கவனமாக கேட்டு கொண்டிருந்தான் , நான் வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன் . லக்ஷ்மி அம்மா முகத்தில் வயதானதின் சுருக்கம் தெரிந்தாலும் அதையும் மீறி அழகாக இருந்தார் , இளமையில் பேரழகியாக இருந்திருப்பார் . அவர் புலம்புவதை எல்லாம் கேட்டு முடித்த சுகன் " நாம முயற்சித்து பார்க்கலாம் , ஆனா அவனுக கிட்ட இருந்து பணம் மீட்கிறது கஷ்டம் " என்றான் . " சரி முயற்சி பண்ணி பார்ப்போம் " என்று சொல்லிய படி கிளம்பி என்னையும் கண்களால் கிளம்பலாம் என்றான் . நான் திரும்பி " காபி நல்லா இருந்தது , வரேன்ங்க " என்றேன் . லக்ஷ்மி அம்மா புன்னகைத்தாள் , இளம் வயதில் பேரழகியாக இருந்திருப்பார் என்பது திரும்பவும் மனதில் தோன்றியது .


காரில் செல்லும் போது சுகன் " இடம் சைட் போட்டு வித்து தரேன்னு வித்து அவனுக வாங்கிட்டானுக , இந்த அம்மா ஒன்னும் தெரியாம எல்லாத்துலயும் கையெழுத்து போட்டு வச்சிருக்கு , பத்து பைசா கூட அவனுக கிட்ட இருந்து வாங்க முடியாது , ஒரே நல்ல விசயம் பாதி சைட் மட்டும்தான் வித்திருக்கு , மீதியை தக்க வச்சுக்கலாம் .. " என்றான்.


"பாவம் டா அந்த அம்மா" என்றேன் , "சின்ன வயசுல பேரழகா இருந்திருப்பாங்க " என்றேன் , கார் ஒட்டியபடியே சட்டென்று என்னை திரும்பி பார்த்தவன் , பிறகு சாலையை நோக்கி திரும்பி ஓட்டுவதில் கவனம் செலுத்தி மெதுவாக புன்னகைத்தான் . "ஆமா" என்றான் .


பிறகு இந்த பிரச்னை சார்ந்து நாலைந்து முறை லக்ஷ்மி அம்மாவை பார்க்க சென்றோம் , இரண்டாவது முறை போன போதே அவருடன் நன்றாக பேச ஆரம்பித்து விட்டேன் , கணவர் இறந்த பிறகு சொத்துகளை காக்க இயலாமல் நிறைய இழந்து விட்டிருக்கிறார் , அவ்வளவு இழந்த பிறகும் சுற்றி இருக்கும் 4 ஏக்கர் நிலமும் அவரிடம் இருந்தது . ஒரு பெண் காலேஜ் படித்து கொண்டிருக்கிறார் , நான்கைந்து முறையும் அவரை பார்க்க முடிய வில்லை , இளம் வயது லக்ஷ்மி அம்மாவை எப்படியாவது பார்த்து விடலாம் என்று எண்ணி இருந்தேன் !


இந்த முறை சென்ற போது முழு நாளும் அங்கு இருக்க வேண்டியதாகி விட்டது . வெளியே மாடுகள் இரண்டு இருந்தது , இரண்டு அதன் கன்றுகளும் , மாடு உண்ணும் புல்களை வளர்த்தி இருந்தார்கள் , தள்ளி ஒரு சீட் போட்ட கூரை கீழ் காய்ந்த புல்களை அடுக்கி இருந்தார்கள் . நிறைய குட்டை தென்னை மரங்கள் இருந்தன . நான் உள்ளே லக்ஷ்மி அம்மா சுகனிடம் புலம்புவதை கேட்க முடியாமல் வெளியே இருந்த ஒரு கல் திண்ணையில் அமர்ந்து கொண்டேன் . 


பசுக்கள் நிலத்திற்கு உள்ளே மேய்ந்து கொண்டிருந்தன , கட்டி இருக்கிறார்கள் என்பதால் அவை ஓரளவுக்கு மேல் நகர முடியாமல் இருந்தன , மாட்டுச் சாலையில் இரண்டு கன்றுகள் இருந்தன ,அதில் ஒன்றை பார்க்க அது சோகத்துடன் இருப்பது போல தோன்றியது , அருகில் சென்று கீழே இருந்த புல்லை எடுத்து அதன் வாய் அருகே நீட்டினேன் , அது என்னை சட்டையே செய்ய வில்லை , நான் திரும்பி மேய்ந்து கொண்டிருந்த அந்த இரு பசுக்களை பார்த்தேன் ,அதில் ஒரு என்னையே பார்த்து கொண்டிருந்தது . சாம்பல் நிறத்தில் இருந்தது அந்த பசு, அதன் அருகில் மூன்று வெள்ளை பறவைகள் சுற்றி கொண்டிருந்தன .


சற்று நேரம் போயிருக்கும் , சாலையை பார்த்து அந்த பசு பார்த்து "மா" என்றது, நான் சாலையை பார்த்தேன் , பசு தொடர்ந்து சாலையை பார்த்து அழைத்து கொண்டிருந்தது , சாலையில் ஒரு 65 வயது இருக்கும் ஒரு வயதான பெண்மணி , கிட்டதட்ட பாட்டி வந்து கொண்டிருந்தார் . அவர் வர வர அவரின் நடையில் வேகம் அதிகரித்த படி வந்தது , பசுவின் அருகில் வந்து "இருடி" என்று சொல்லி விட்டு மாட்டு சாலைக்குள் வந்து கன்றினை அவிழ்த்து பசுவிடம் கூட்டி சென்றாள் . கன்றினை கொஞ்சம் பால் குடிக்க விட்டு பிறகு சற்று தள்ளி கன்றினை கட்டி விட்டு 

பெரிய பால் சொம்பு எடுத்து பசுவில் பால் கறந்தாள், பசு நிதானமாவது போல இருந்தது , கிழவி திரும்பி என்னை பார்த்து புன்னகைத்து "நேரம் ஆகிடுச்சு , இதும் பாவம் எவ்வளவு நேரம் தாங்கிட்டு இருக்கும் "என்றாள் . நான் யார் என்று தெரியாமலேயே நெடு நாள் பழக்கம் போல பேசும் அந்த இயல்பு அவர் மீது பிரியம் கொள்ள வைத்தது . நான் பதில் ஏதும் சொல்லாமல் புன்னகைத்தேன். " மக, பேத்தி எல்லாம் வீட்டுக்கு வந்திருக்காங்க , அதான் நேரமாச்சு , பேத்திக்கு பத்து ஆளு வாயி , பதில் சொல்லி முடிய மாட்டேங்குது " என்று சொல்லி புன்னகைத்தாள் . நான் " இங்க வேலை செய்யறீங்களா " என்று கேட்டேன் , " ஆமா தம்பி , இந்த அம்மணி ஒரு நாள் வீட்டுல இருக்க விடாது , இவங்களுக்கும் திட்டறதுக்கு ஆளு வேணுமுல்ல " என்று சொல்லி சிரித்தாள் . " எவ்வளவு பிள்ளைக " என்றேன் , "இரண்டு பையன் ,இரண்டு பொண்ணு ,எல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு " என்றாள். " இங்க எவ்வளவு நாளா இருக்கீங்க " என்றேன் ," இருபது வருஷம் ஆயிடுச்சு , நான் இங்க வந்த பிறகுதான் இந்த அம்மாவே இங்க கல்யாணம் பண்ணி வந்துச்சு " என்று சொல்லி சிரித்தாள். " எவ்வளவு சம்பளம் " என்றேன் , " நூறு ரூபா தம்பி" என்றாள் , நான் திடுக்கிட்டு " இப்ப எவ்வளவு வாங்கறீங்க " என்றேன் , " இப்பதான் தம்பி ,தினம் நூறு ரூபா சம்பளம் " என்றாள். அதிர்ச்சியில் இருந்து மீளாமல் " ரொம்ப குறைவுங்க " என்றேன் , இப்ப வீட்டுல பிள்ளைக வந்து இருக்காங்கனு மதியம் போயிட்டு வரேன் ,இல்லைனா காலைல வந்தா சாயங்காலம் வரை இங்கதான் , சும்மா இருக்க விடாது ,ஏதாவது வேலை சொல்லிட்டே இருக்கும் , ஆனா நல்ல அம்மணி " என்றாள், மேலும் " அட்வான்ஸ் கொடுக்கும் , மெல்ல கழிச்சிக்குவேன் " என்றாள். நான் " அநியாயம் " என்று மனசுக்குள் சொல்லி கொண்டேன் . 


வீட்டில் இருந்து லக்ஷ்மி அம்மா வெளியே வருவது தெரிந்தது , சுகனும் கூட வெளியே வந்தான் . நான் எழுந்து அவர்கள் அருகில் சென்றேன் . 


சுகன் " நாளைக்கு வரேன்ங்க" என்று கார் அருகில் சென்றான் ,நானும் லக்ஷ்மி அம்மாவிடம் " வரேங்க" என்று சொல்லி காருக்கு சென்றேன் , திரும்பி கிழவியை நோக்கினேன் , அவர் என்னையே பார்த்து கொண்டிருப்பாள் போல , நான் பார்த்ததும் என்னை நோக்கி புன்னகைத்தாள் . காரில் ஏறும் போது லக்ஷ்மி அம்மா கிழவியிடம் " போன உடனே வரணும்னு தோனாதா" கத்துவதை கேட்க முடிந்தது . 


காரில் போய் கொண்டிருக்கும் போது சுகன் சத்தமாக பாட்டு வைத்தான் , நான் சட்டென்று அதை நிறுத்தினேன் , திரும்பி என்னை பார்த்து முறைத்தான் . நான் " மாட்டுமா !" என்றேன் , " போற போக்கை பார்த்தா மொத்த சொத்தை நமக்கு எழுதி கொடுத்துடும்" என்று சொல்லி சிரித்தான் . நான் மகிழ்ச்சியானேன் , என் மகிழ்ச்சியைப் பார்த்து சுகன் சற்று ஆச்சிரியமாகி " அந்த அம்மா பாவம்னு சொன்ன " என்றான் . நான் பதில் சொல்லாமல் புன்னகைத்தேன் . 



Friday, January 31, 2025

பெண் ( குறுங்கதை)

வீட்டின் முன்பு இரு கொம்புகள் போல இரு பக்கமும் ஒன்று என இரண்டு மரங்கள் எங்கள் வீட்டில் இருந்தன . முன்பு எட்டு மரங்கள் இருந்தன , வீட்டை விரிவாக்கி கட்டும் போது மீதி மரங்களை எடுத்துவிட்டு இந்த இரண்டை மட்டும் எடுக்காமல் விட்டுவிட்டோம் , அம்மாவின் பிடிவாதம் காரணமாக . அம்மாவுக்கு வீட்டை விரிவாக்கியதிலேயே இஷ்டம் இல்லை , வீட்டின் முன்புறத்தின் அழகே போய் விட்டது என்று எப்போதும் புலம்பி கொண்டிருப்பாள் . 


இரண்டு தென்னைகளும் நன்றாக காய் காய்க்கும் , இருமாத இடைவெளிகளில் காய்கள் எடுப்போம் , அம்மா எங்கள் தேவை போக மீதி காய்களை அருகில் இருக்கும் மளிகை கடைக்கு விற்று விடுவாள் . முன்பு காய்கள் பறிக்க சாமி தாத்தா வருவார் , மரம் ஏறும் சமயத்தில் இவருக்கு சட்டென்று எப்படி சக்தி வருகிறது என்று தோன்றும் , சிறுவனை போல சட்சட்டென்று ஏறி விடுவார் . சட்டை இல்லாத ,தொப்பை இல்லாத , ஒல்லியான கருப்பு உடல் , துண்டை தலையில் முண்டாசு போல கட்டி இருப்பார் . எப்போதும் மதியம் போல வருவார் , அம்மா உணவு அளித்து விடுவாள் , அவர் கிளம்பும் போது அம்மா பணம் கொடுப்பார் ,அது எவ்வளவு இருக்கும் என்று அவர் பார்த்ததே இல்லை . போன வருடம் அவர் மறைந்த பிறகு எங்களுக்கு காய் பறிக்க ஆட்களே அமைய வில்லை , இரண்டு மரங்கள் மட்டும் என்பதால் யாரும் ஆர்வமாக வருவது இல்லை , பலமுறை அழைத்து வற்புறுத்த வேண்டும் ,அப்போதுதான் வருவார்கள் , அப்படி வந்தால் அவர்கள் கேக்கும் கூலி கிடைக்கும் காய்களின் விலையை விட அதிகமாக இருக்கும் . பிறகு நான் காய்கள் பறிக்க ஆட்களை தேடுவதையே விட்டு விட்டேன் , அம்மா ரொம்பவும் வற்புறுத்தினால் அப்போது மட்டும் யாராவது கிடைப்பார்களா என்று தேடி பார்ப்பேன் . இந்த முறை ஏனோ சுத்தமாக ஆட்களே கிடைக்காமல் இருந்தது , அம்மாவிடம் பேசாமல் வெட்டிவிட்டு போய் விடலாம் என்றேன் . 


இந்த சமயத்தில் தான் அவரை பார்த்தேன் ! பார்த்த போதே மரமேறுபவர் என்று தெரிந்தது , மரம் ஏறுவதற்கான கயிறும், சீவும் அறுவாளும் வைத்திருந்தார் . 35 வயது இருக்கலாம் , கருப்பு நிறம் ,உயரமாக இருந்தார் ,கண்கள் நீண்ட நாட்கள் தூங்காதவர் போல பழுத்து இருந்தன ,தெருவின் இருபக்கமும் பார்த்த படியே சென்று கொண்டிருந்தார் , நான் இருசக்கர வாகனத்தை நிறுத்தி ,இறங்கி அவர் அருகில் சென்றேன் . 


" அண்ணா , காய் பறிக்கணும் வரீங்களா, அடுத்த வீதில தான் வீடு " என்றேன் .


"போலாங்க" என்றார் . 


இரு சக்கர வாகனத்தில் அவரை கூட்டி கொண்டு வீட்டிற்கு வந்தேன் . வெளி கதவு திறக்கும் சத்தம் கேட்டு அம்மா வெளியே வந்தாள், அவரை பார்த்து மலர்ந்தவள் என்னை பார்த்து "எங்க இருந்து பிடிச்ச இவரை" என்றாள் .


"பக்கத்து வீதியில் நடந்து போயிட்டு இருந்தாரு ' என்றேன் . 


வந்தவர் சட்டையை கழற்றி , கயிறை பெல்ட் போல கால்களுக்கு மாட்டி மரம் ஏற ஆரம்பித்தார் , தவளை தவ்வி தவ்வி ஏறுவதை போல அவர் மரத்தில் ஏறுவது இருந்தது , 20 நிமிடங்களில் இரு மரங்களிலும் வேலையை முடித்து இறங்கி விட்டார் . அம்மா என்னிடம் பணம் கொடுக்கும் படி சைகையில் சொன்னாள், நான் இருநூறு ரூபாய் எடுத்து அவருக்கு கொடுத்தேன் . வாங்கி கொண்டவர் , ஏதோ சொல்வதற்கு தயங்குவது போல நின்று பின் தன் கைப்பையில் இருந்த கவரில் இருந்து ஒரு போட்டோ எடுத்து என்னிடம் காட்டினார் . அது ஒரு பெண்ணின் புகைப்படம் ! கிராமத்து முகம் , சற்று மாநிறத்தில் அழகாக இருந்தாள் , நான் இவர் மனைவியாக இருக்கும் என்று யூகித்தேன். அவர் " இவங்களை எங்கயாவது பார்த்து இருக்கீங்களா " என்றார் . 


நான் மீண்டும் அந்த புகைப்படத்தை பார்த்தேன் , அவரை நோக்கி " பார்த்தது இல்லைங்க , இவங்க யாரு " என்றேன் . 


" சம்சாரம்தாங்க , காணாம் போயிட்டாங்க , எங்க ஊர்காரர் இவளை இங்க திருப்பூர் பஸ் ஸ்டாண்டுல வச்சு பார்த்து இருக்காரு , அதான் இங்க எங்கயாவது இருப்பானு தேடிட்டு இருக்கேன்" என்றார் .


எனக்கு கேட்க திகிலாக இருந்தது , " எவ்வளவு நாளா தேடறீங்க" என்றேன் . 


"இன்னையோட 40 நாள் ஆச்சுங்க ஊருல இருந்து கிளம்பி "என்றார் .


" எங்க தங்றீங்க " என்றேன் .


பதில் சொல்லாமல் சோகமாக புன்னகைத்தார் . 


"4 வது படிக்கற பொண்ணு இருக்குங்க , அம்மாட்ட பாக்க விட்டு வந்திருக்கேன்" என்றார் .


ஏதோ சொல்ல வந்தவர் பின்பு அதை தவிர்க்கும் இயல்பு காட்டி "சரி கிளம்பறேங்க"என்று சொல்லி வெளியேறினார் . 


நான் " எங்கயாவது ட்ராப் பண்ணனுமா " என்று கேட்டேன் , "வேணாம்ங்க" என்று சொல்லி விட்டு நடந்து சென்றார் , அவர் செல்வதை பார்த்து கொண்டிருந்தேன் , பிறகு வீட்டின் வாசலை திரும்பி பார்த்த போது அம்மா நின்று இருந்தாள்,


 "பாவம் மா அந்த ஆளு " என்றேன் அம்மாவிடம் . 


"அந்த பொண்ணு அவன்கிட்ட மாட்ட கூடாது" என்றாள் அம்மா .


நான் மனம் அதிர்ந்து " ஏன்" என்றேன் . அம்மா பதி

ல் ஏதும் சொல்லாமல் உள்ளே சென்றாள்.


Monday, January 27, 2025

தோற்றம் (குறுங்கதை)

  அந்த காலி நிலத்தின் முன்பக்கத்தை தகரத்தால் மறக்கும் வேலை இன்று செய்ய வேண்டி இருந்தது . நண்பரின் நிலம் அது , குடிகாரர்கள் , சிறுநீர் கழிப்பவர்கள் தொந்தரவுகளால் அந்த நிலத்தின் முன்பகுதியை வண்ண தகரத்தால் மறைத்து தரும் படி கேட்டிருந்தார் . தகரம் நிற்க கூடிய ஃப்ரேம் வேலைகளை நேற்றே முடித்து விட்டிருந்தேன் , இன்று சென்று ஒரு மணிநேரம் வேலை செய்தால் தகரத்தை வைத்து வேலையை முடித்து விடலாம் . உதவியாளர் பாண்டியை கூட அழைத்து கொண்டு வேலைக்கு கிளம்பினேன் .


அந்த நிலம் சிறு நிலம்தான் , ஆனால் நகரத்தின் மையத்தில் இருந்தது , பெரிய தொகை கொடுத்து நண்பர் அதை வாங்கி இருந்தார் , வரிசையாக கடைகள் என செல்லும் அந்த சாலையில் அந்த நிலம் மட்டும் கட்டிடம் இல்லாத புதர்கள் மண்டிய நிலமாக இருந்தது . குடிகாரர்களுக்கு அந்த நிலம் தோதுவாக இருந்தது , சிறுநீர் கழிப்பிடமாகவும் ஆகி இருந்தது , எனவேதான் நண்பர் வேறு வழியில்லாமல் தகர மறைப்பை போடும் நிலைக்கு வந்திருந்தார் . எனக்கும் அதனால் ஒரு வேலை கிடைத்தது .


தகரம் மறைக்க வேண்டி முதல் தகரம் வைத்து ஸ்க்ரூ மாட்டும் போதுதான் அவனை பார்த்தேன் , அருகில் இருந்த ஷட்டர் மூடிய கடையின் முன்பு அமர்ந்து இருந்தான் . சற்று அழுக்கான உடை அணிந்திருந்தான் , போதை ஆசாமி போல இருந்தான் , குடிகாரனுக்குரிய கண்கள் ,சீவாத எண்ணெய் காணாத செம்பட்டை முடி ,தூக்கத்தில் பாதியில் எழுந்து வந்தவன் போல இருந்தான் , இவனை போல பலரை பார்த்து இருக்கிறேன் , கையில் ஏதாவது பொருள் கிடைத்தால் கொண்டு போய் விற்று குடித்து விடுவார்கள் , குடிப்பதற்காக கையேந்த யோசிக்கவே மாட்டார்கள் . எனக்கு ஒவ்வொரு முறையும் தகர சீட்டை உள்ளே இருந்து எடுத்து வந்து மாட்ட வேண்டி இருந்தது , உள்ளே செல்லும் போது ஸ்க்ரூ செய்யும் டிரில்லிங் மிஷினை இவன் திருடி சென்று விடுவானோ என்ற பயம் இருந்தது , எனவே உள்ளே செல்லும் போது மிசினையும் எடுத்து உள்ளே சென்று வந்து கொண்டிருந்தேன் . 


அவன் நான் தகர சீட் மாட்டும் வேலையை உற்று நோக்கி கொண்டிருந்தான் , அவன் கவனம் முழுதும் நான் எப்படி செய்கிறேன் என்பதை காண்பதில் இருந்தது . நான் இப்படி மூன்று முறை தகரம் மாட்டி உள்ளே மிஷின் எடுத்து கொண்டு சென்றிருப்பேன், நான்காவது முறை இன்அப்படி உள்ளே செல்லும் போது அவன் என்னை "அண்ணா" என சட்டென அழைத்தான் ,நான் திரும்பி அவனை பார்த்தேன் , அவன் கீழே கை காட்டிய படி "போன் கீழே விழுந்திருக்கு பாருங்க" என்றான் , அவன் காட்டிய இடத்தில் ,கிட்டதட்ட அவன் அருகில்  என் போன் தவறி கீழே விழுந்திருந்தது . நான் அதை அறியாமல் உள்ளே தகரம் எடுக்க சென்று கொண்டிருந்தேன் !

Tuesday, December 3, 2024

சிதை

 அப்பாவுக்கு எப்போதும் பதபதைப்பு உண்டு , நானோ ,அக்காவோ வீடு வர கொஞ்சம் தாமதம் ஆனாலும் பதறி விடுவார் . கொஞ்சம் தாமதம் ஆனாலும் நாங்கள் வீடு வரும் வழியில் அவர் எங்களை தேடி வேகமாக வருவதை பார்க்க முடியும் . சிறுவயதில் ஏன் அப்பா இப்படி இருக்கிறார் என்று பல முறை எண்ணியதுண்டு , அப்பாவை பேடி என்று நினைத்திருந்தேன் . அம்மா இந்த பதைப்பை வெளியே  வெளியே காட்டிக்கொள்ளா விட்டாலும் அவளது மெளனமான துயரம் வெளிப்படும் இறுகிய முகம் அதை வெளிக்காட்டி விடும் , முன்பு  எல்லாம் அப்பா அம்மா இப்படி இல்லை , எங்கள் ஊரில் ஒரு கலவரம் நடந்தது , அதன் பிறகு அம்மாவும் அப்பாவும் இப்படி ஆகி விட்டார்கள் !


எங்கு திரும்பினாலும் பசுமை வயல்கள் தென்படும் ஊர் எங்களுடையது , ஒரே ஒரு வளைந்தோடும் கருநதி போல ஒரு தார்சாலை மட்டும் இதில் இருந்து விலகி தனியாக தென்படும் , ஆனால் அதுதான் எங்கள் கிராமத்தை பிறருடன் இணைக்கும் பாதை , அந்த கலவர நாளில் அதில்தான் ஆயிரக்கணக்கானோர் தடிகளும் , கத்தியும், வாளுமாக வெறியோடு வந்தனர் . 


நாங்கள் விளையாடி கொண்டிருந்தோம் , கூட்டம் வருவதை ஆவலோடு பார்த்தோம் , ஆனால் அருகில் வர வர அவர்களிடம் இருந்த ஆயுதங்களும் , கட்டைகளும் ,அவர்கள் கொண்டிருந்த வெறியும் எங்களை தாக்க தான் வருகிறார்கள் என்று பயந்து வீடுகளுக்கு ஓடினோம் . வீடு முன்பு இருந்த ஆலையில் கதிர் அருவாள்களுக்கு பிடி போட்டு கொண்டிருந்த அப்பா நான் ஓடி வருவதை பார்த்து திரும்பி பார்த்தார் , கூட்டத்தை பார்த்து வெலவெலத்தார் , அம்மாவும் அக்காவும் வாசலில் வந்து பார்த்து பயந்து நின்றார்கள் , அப்பா உடனே எங்களை வீட்டின் உள்ளே தள்ளி விட்டு வெளியே கதவை தாளிட்டு நின்று கொண்டார் .அம்மா அக்காவையும் என்னையும் பிடித்து அனைத்து அழுது கொண்டிருந்தாள் . எங்களுக்கு ஏதும் புரிய வில்லை என்றாலும் அம்மாவை பார்த்து அக்காவும் நானும் அழுது கொண்டிருந்தோம் . 


கூட்டம் எங்கள் கிராமங்களில் சிதறி ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்றது , எங்கள் வீடு முன்பும் வந்தனர் . நிறைய பேர் ஆவேகமாக எங்கள் வீடு முன்பு வரும் சத்தங்களை உணர முடிந்தது , அம்மா அதை கேட்டு மேலும் எங்களை இறுக்கி நின்றாள் , அவள் கண்களில் நீர் வந்து கொண்டிருந்தாலும் அவள் சத்தம் எதுவும் இட வில்லை , நான் அம்மாவிடம் பேச முயன்ற போது என் வாயில் கைப்பொத்தினாள். வெளியே கூட்டம் திரண்டு நின்று கத்தும் சத்தங்கள் கேட்டேன் , அவ்வளவு சத்தங்கள் இடையிலும் அப்பாவின் குரலை என்னால் நன்கு உணர முடிந்தது . 


" எங்களை விட்டுடுங்க , எங்களை விட்டுடுங்க " என்று அப்பா ஒரே வார்த்தையை திரும்ப திரும்ப அழுது கொண்டு சொல்வதை கேட்க முடிந்தது . அடிக்கும் சத்தம் கேட்டது , அப்பா அலறுவது கேட்டது , யாரோ 'வேண்டாம் விடு" என்று சொல்வது கேட்டது,  மீண்டும் அந்த குரல் அதிக சத்தத்துடன் அடிப்பதை நிறுத்த சொல்லவும் அப்பாவை அடிக்கும் ,அப்பா அலரும் சத்தம் நின்றது . நிறுத்த சொன்ன குரல் " இது எங்க இடம் , எங்க மண்ணு " என்று சொல்வது கேட்டது . பிறகு  கூட்டம் கலையும், திரும்பி செல்லும் சத்தங்கள் கேட்டன . 


சில நிமிடங்கள் கழித்து சத்தங்கள் முழுமையாக மறைந்த பிறகு அம்மா கதவின் அருகில் சென்று மெதுவாக அப்பாவை அஜு என்று அழைத்தாள், தாழ் திறக்கும் சத்தம் கேட்டது , கதவு திறந்தது , அப்பா முகங்களில் வீக்கங்களுடன் ,முடி கலைந்து , சட்டைகள் கிழிந்து நின்றிருந்தார் , கண்கள் நீர் நிரம்பி இருந்தது , நான் வெளியே பார்த்தேன் , அப்பாவின் ஓலையினால் செய்யப்பட்ட ஆலை நொறுக்க பட்டிருந்தது , பொருட்கள் சிதறி கிடந்திருந்தன , நான் ஓடி போய் நாங்கள் வளர்க்கும் பசுவை பார்த்தேன் , கன்றும் பசுவும் மிரண்டு நின்றிருந்தது , பசுவின் மேல் கட்டையால் தாக்கிய தடம் நீண்ட வடு போல வீங்கி இருப்பதை பார்த்தேன் .


 அப்பா வாசலில் இருந்த திண்ணையில்  அமர்ந்து இருந்தார் , அன்று வீட்டில் அம்மா சமைக்க வில்லை , நானும் எதுவும் கேட்டு அம்மாவை நச்சரிக்க வில்லை , இரவுதான் அப்பா அந்த மனநிலையில் இருந்து சற்று வெளியே வந்தார் ," ஏதாவது புள்ளைகளுக்கு சமைடி" என்றார் , அம்மா எழுந்து அடுப்படிக்கு செல்வதை பார்த்தேன் .


இரவில் எங்கள் கிராம்த்தில் இருந்த எல்லோரும் கூடினோம் , யாரும் பேச வில்லை , பதட்டம் அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்திருந்தது . கலவரக்காரர்கள் கண் முன் தெரிந்த ஆட்களை அடித்து இருக்கிறார்கள் , ஆனால் யாரையும் கொல்ல வில்லை ,எந்த வீட்டிற்குள்ளும் புக வில்லை . ஆனால் நிறைய இடங்களை சேத படுத்தி இருந்தார்கள் . எங்கள் கிராமம் பண்டிகைகளை ,விழா கோலங்களை மட்டுமே அதுவரை பார்த்து இருந்தது ,  உடைந்த ,சிதைந்த கோலங்களை முதல்முறையாக பார்ததது .


எங்கள் ஊரில் எல்லோரும் கூடும் பகுதி கோவில் மைதானம் , எந்த விழா என்றாலும் அங்குதான் நடக்கும் , அங்குதான் அன்று இரவில் எல்லோரும் அமர்ந்து இருந்தோம் , அப்பாதான் ஊரில் எதற்கும் முன்னின்று பேசுவது ,அவரே ஒடிந்து அமர்ந்து இருந்தார் .எனக்கு அவர் பேசுவதை கேட்க எல்லோரும் காத்திருப்பதாக தோன்றியது . ஒரு கட்டத்தில் அப்பா எழுந்து நின்று பேச தொடங்கினார் . அப்பாவின் குரலில் முன்பு இல்லாத நடுக்கதை என்னால் உணர முடிந்தது , அதை உணரும் போதே எல்லோரும் அதை உணர்ந்து இருப்பார்கள் என்று தோன்றியது . அருகில் இருந்த அம்மாவை பார்த்தேன் ,அவள் அருகில் அக்கா இருந்தாள், அவள் கையை அம்மா இறுக பற்றி இருந்தாள். 


அப்பா " இது நம்ம மண்ணுதான் , நம்ம உயிருதான் , ஆனா வந்து போனவங்க இது நம்ம மண்ணுல்லனு சொல்லிட்டாங்க , அவங்க வந்து போன பிறகு எனக்கு தோனினது, இந்த மண்ணை நம்ம கிட்ட இருந்து பிடுங்கிட்டாங்க , இது நம்ம கிட்ட இருந்து போயிடுச்சு ,இனி நாம இங்க இருக்க முடியாது " என்றார் . அவர் பேசுவதை கேட்டு கூட்டம் உறைந்து போயிருந்தது , அப்பா " நம்ம மண்ணு,இப்ப நமக்கே அந்நியமாகிடுச்சு " என்றார் .


இந்த கலவரங்கள் பற்றிய நிகழ்வுகள் ஒவ்வொரு துளியும் காட்சிகளாக என் மனதில் இருந்தாலும் ,அப்பாவின் பயத்தை ,அப்பாவின் பேடித்தனத்தை, அப்பாவின் பதப்பதப்பை முழுமையாக புரிந்து கொள்ள நான் சற்று வளர வேண்டி இருந்தது . மெல்ல நாங்கள் இந்த நாட்டில். சிறுபான்மையினர் என்பதை உணர்ந்தேன் , எங்களை பிறர் எதுவும் செய்து விட முடியும் என்பதை உணர்ந்தேன் , நாங்கள் தப்பிக்க. முடியாத குழியில் மாட்டி இருக்கிறோம் என்பதை உணர்ந்தேன் , எங்கள் மண்ணே எங்களுக்கு மரண குழியாக ஆகி விட்டிருப்பதை உணர்ந்தேன் . ஏதேனும் நடந்து விடுமோ என்ற பயத்துடன் எப்படி அப்பா இருக்கிறாரோ இப்போது நானும் அந்த பயத்துடனே வாழ்கிறேன் , என்னால் இவைகளை மறந்து சிரிக்க கூட முடிவதில்லை .

என்னுடைய பிரியமான மண் என்னுடையதல்ல என்னால் ஏற்று கொள்ளவே முடியவில்லை .





Tuesday, September 24, 2024

துயர் ( குறுங்கதை )

 நான் மூன்று நேரமும் ஹோட்டல்களில் சாப்பிடுபவன் , திருப்பூர் வந்த இந்த 10 ஆண்டுகள் முழுதும் என் உணவு ஹோட்டல்களில்தான் , மூன்று நேரமும் ஓரளவு நல்ல விதத்தில் உணவு உன்ன வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு 200 ரூபாய் வரை ஆகி விடும் , என் பகுதியில் எந்த எந்த கடைகளில் ஓரளவு நல்ல உணவுகள் கிடைக்கும் என்று என்னால் சொல்லி விட முடியும் . அப்படி தேர்ந்து தேர்ந்து முடிவில் நான் வந்தடைந்த இடம் தான் , பரணி ஹோட்டல் . பெரியவர் கல்லாவில் இருந்தாலும் உணவு அளிப்பது ,பார்த்து கொள்வது எல்லாம் குணவதி அக்காதான் . எனக்கு அவங்களை மிக பிடிக்கும் , காரணம் எப்போதும் அவங்க முகத்தில் இருக்கும் துயரம் தோய்ந்த சாந்த முகம்தான் , எப்போதும்  எந்த நேரத்திலும் அந்த முகத்துடன் மட்டுமே பார்த்து இருக்கிறேன் . ஒரு முறை "நீங்கள் சிரிக்கவே மாட்டீர்களா "என்று கேட்டே விட்டேன் , அப்போதுதான் அக்காவிடம் இருந்து சின்ன புன்னகை வெளிவந்தது ,பிறகு " சாப்பிடு" என்று போய் விட்டார்கள் .


அவங்களுக்கும் என்னை பிடிக்கும் , பிரியத்தோடு பரிமாறுவார்கள் . உண்மையில் அவங்களை கடைக்கு வரும் எல்லோருக்கும் பிடிக்கும் . பெரும்பாலும் பேசவே மாட்டாங்க , கல்லாவில் இருக்கும் பெரியவரான அவங்க அப்பாவும் , பரிமாற கூட இருக்கும் அவங்க அம்மாவும்தான் பேசி கொண்டிருப்பார்கள் . எனக்கு குணவதி  அக்காவும் பேச வேண்டும் என்று ஆசையாக இருந்தது ,குறைந்தபட்சம் அவரின் துயரத்திற்கான காரணத்தையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று . 


வேலை இல்லாத சமயங்களில் அங்கு சென்று அமர்ந்து கொண்டிருப்பேன் , பெரியவர் ஏதாவது பேசி கொண்டிருப்பார் , அவை பிடிக்கா விட்டாலும் கேட்டு கொண்டிருப்பேன் . மெல்ல நான் ஆபத்தானவன் இல்லை என்று உணர்ந்து  பெரியவரும் அம்மாவும் சகஜமாக உரிமையுடன் பழக துவங்கி விட்டனர் , கடைகளுக்கு சென்று பொருள்கள் வாங்கி கொடுப்பது போன்ற வேலைகள் எல்லாம் செய்து கொடுப்பேன் . நாட்கள் செல்ல செல்ல குணவதி அக்காவும் என்னிடம் மனம் விட்டு பேச ஆரம்பித்திருந்தார்கள் . 


அக்காவுக்கு திருமணம் ஆகி ஒரு பையன் இருக்கிறான் ,அவன் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான் என்பது வரை தெரியும் ,ஆனால் அவர் கணவர் பற்றி எதுவும் தெரியாது , அவர் கூட இல்லாமல் இருப்பதை வைத்தும் , தன் பெற்றோருடன் இருப்பதை வைத்தும் கணவர் அக்காவை கைவிட்டு சென்று விட்டார் என்று எண்ணி இருந்தேன் . அதை பற்றி கேட்க வேண்டும் என்று வெகுநாள் எண்ணி இருந்தேன் . ஒரு சந்தர்ப்பம் அமைய கேட்டும் விட்டேன் .


" அக்கா உங்க வீட்டுகாரர் எங்கே, உங்களை விட்டுட்டு போயிட்டாரா" என்று கேட்டேன் அப்போது .


" ஆமா " என்று சொல்லி பிறகு ஏதும் சொல்லாமல் அக்கா சமையல் வேலையை பார்க்க உள்ளே சென்று விட்டார் . நானும் அக்கா பின்னே கூடவே உள்ளே சென்று " உங்களை போல ஒருவரை விட்டுவிட்டு போறார்னா ,கண்டிப்பா அவர் முட்டாளாதான் இருப்பார் " என்றேன் . 


ஆச்சிர்யமாக நான் சொல்வதை கேட்டு அக்கா சிரித்தாள் , " போடா " என்றாள்.


நான் " அப்பறம் வேறென்ன சொல்ல சொல்றீங்க " என்றேன் .


அக்கா சிலகணம் பேசாமல் நின்று ,பிறகு என்னை நிமிர்ந்து பார்த்து " அவர் ரொம்ப நல்லவர் , என் மேல ரொம்ப அன்புள்ளவர் " என்றேன் .


நான் மேற்கொண்டு ஏதோ கேட்கவர, அக்கா உடனே " இதை பத்தி பேச வேணாம் " என்றாள். சரி என்று அதோடு விட்டு விட்டேன் . 


சில நாட்கள்தான் என்னால் அதை பற்றி கேட்காமல் இருக்க முடிந்தது . மீண்டும் சந்தர்ப்பம் அமைய பேச ஆரம்பித்தேன் .


ஒருமுறை " அவர் எங்க இருக்கார் க்கா" என்றேன் . அக்கா " தெரியல " என்றார் , அப்போது அக்கா முகம் பார்த்தபோது அழுது விடுவாளோ என்று தோன்றியது . நான் " வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாரா " என்று கேட்டேன் . அக்கா " தெரியல " என்ற அந்த ஒற்றை பதிலையே சொன்னார் . மேலும் " அவங்க போனதில் இருந்து அவங்களை நான் திரும்ப பாக்கவே இல்லை , எங்க இருக்கார்னே தெரியாது , நான் கடவுள்கிட்ட வேண்டறது ஒன்னு மட்டும்தான் ,அவங்க நல்லா இருக்கனும் என்பது மட்டும்தான் " என்றார் . 


உண்மையில் நான் குழம்பினேன் , "அவங்களை தேடலையா நீங்க " என்றேன் , அக்கா பதில் ஏதும் சொல்லாமல் என்னை பார்த்தாள் , கண்களில் நீர் வந்து கொண்டிருந்தது . 


பிறகு என் எண்ணங்கள் முழுதும் அக்கா மீதுதான் இருந்தது . அக்காவின் கணவர் எங்கு இருக்கிறார் என்று தேடி கண்டு சேர்த்து விட வேண்டும் என்று கூட எண்ணினேன் , அக்காவிடம் ,அக்காவின் பெற்றோரிடம் பேசி தகவல்கள் வாங்க வேண்டும் என்று எண்ணினேன் . என் எண்ணங்களை அக்காவிடம் சொல்லவும் செய்தேன் . 


அக்கா " சேர்ந்திருக்க முடியாதுடா " என்றாள். " ஏன்" என்று கேட்டேன் ,அக்கா எதுவும் சொல்லாமல் போய் விட்டாள் . நான் திரும்ப தொடர்ந்து நச்சரித்தேன் . பிறகு ஒருமுறை " நீங்க எவ்வளவு நாள் சேர்ந்து இருந்தீங்க" என்று கேட்டேன் , "மூனு வருடம் " என்று அக்கா சொன்னாள். சட்டென்று ஏதோ யோசித்து " காதல் திருமணமா" என்று கேட்டேன் , " ஆமா" என்றாள், "சொந்தமா"  என்றேன் ," ஆமா ,சித்தப்பா ,அப்பாவோட கடைசி தம்பி " என்றாள்!

Wednesday, March 15, 2023

ஆசிரியர் ( சிறுகதை )

 90 ஆண்டு கால கட்டடம் அது, செங்கல்க்கு பதில் கற்கள் அடுக்கி கட்டப்பட்டிருக்கும், மேலே ஓட்டு கூரை, சுவர் உயரம் எப்படியும் 15 அடி வரும், கற்கள் என்பதால் சுவர் மேடு பள்ளங்களாக இருக்கும், ஆனால் மண்ணால் கட்டிய சுவர் போல தோன்ற வில்லை, வேறு ஏதோ மண்ணுடன் சேர்க்க பட்டிருக்க வேண்டும், தற்கால சிமின்ட் போல உறுதியாக இருக்கும். ஒவ்வொரு அறையும் இது போல தான், பெரிய பெரிய ஹால் போல, ஜன்னல் ஆறு அடி உயரம் கொண்டவை, ஜன்னல் கம்பிகள் வலுவானவை. 6-10 வகுப்பு வரை உள்ள எங்கள் உயர்நிலை பள்ளி இந்த தோற்றத்தில் இருந்தாலும், விளையாட்டு மைதானம் எதிர்புறம் உள்ள ஆரம்ப நிலைப்பள்ளி புதிய கட்டிடம். செங்கல்களால் கட்டப்பட்ட உயரம் குறைவான் சின்ன  சின்ன அறைகள் வரிசையாக இருக்கும், மூன்று அடி சுவர்தான், மீதி உயரத்தை மர சட்டகங்களால் தடுத்து இருப்பார்கள். ஐசக் ஜான் நிக்கோலாஸ் வாத்தியார் இருக்கும் அறை இந்த இரு கட்டிடங்களையும் சேராமல் மைதானத்திற்கு நேர்எதிர் ஓரத்தில் இருக்கும், ஐசக் வாத்தியார் மற்ற வாத்தியார்களுடன் பேச மாட்டார், ஆசிரியர் அறையில் எல்லா ஆசிரியர்களும் இருப்பார்கள், இவர் அங்கு போய் நாங்கள் பார்த்ததே இல்லை, வகுப்பு முடிந்தவுடன் இங்கு வந்து விடுவார், இந்த அறை உண்மையில் தொழிற்கல்வி அறை, இங்கு டேனியல் வாத்தியார்தான் தொழிற்கல்வி எடுப்பார், அதாவது ஆசாரி வேலை சொல்லி கொடுப்பார், இந்த அறையின் ஒரு மூலையில்தான் டேபிள் போட்டு ஐசக் வாத்தியார் அமர்ந்து இருப்பார்.


அந்த டேபிளில் ஐசக் வாத்தியார் அமர்ந்திருக்கும் போது இரண்டு விசயத்தை பார்க்கலாம் ஒன்று சிகரெட், இன்னொன்று டேபிளில் இருக்கும் பழைய குட்டி ரேடியோ. எந்நேரமும் சிகரெட் புகைப்பார், பஞ்சு இல்லாத கோல்டபிளேக், புகை நாற்றம் அவரிடம் எப்போதும் இருக்கும், கரிய நிறம், குட்டையான சுருள்சுருள் முடி, நெற்றியில் வழியும் அளவு எண்ணெய் தேய்த்து இருப்பார், வற்றிய உடலை உடை மறைத்திருக்கும், கைகளில் நரம்புகள் வரிவரியாக தெரியும், அவர் பாடம் எடுப்பதை பார்க்காதவர்கள் அவருக்கு பேச வராது என்றே நினைப்பார்கள், வேறு எங்குமே அவர் பேசி யாருமே பார்த்தது இல்லை. அவருக்கு ஒரு விஷயத்தில் படுபயங்கர பிரியம் இருந்தது, அது கிரிக்கெட், அந்த ரேடியோ அதற்க்குதான், கிரிக்கெட் நடக்கும்போது எந்நேரமும் கமெண்ட்ரி கேட்டு கொண்டிருப்பார், அவர் மனம் ரேடியோவிற்குள் புகுந்து விட்டது போல இருக்கும், அல்லது அவர் காதுக்குள் ரேடியோ புகுந்து விட்டது போல!


ஐசக் வாத்தியார் எங்களுக்கு கணக்கு பாடம் எடுப்பவர், ஒன்பதாவதிலும் அவர்தான் எனக்கு கணக்கு பாடத்திற்கு வந்தார், அவர் வகுப்பு ஆரம்பமாகிறது என்றாலே அறை நிசப்தத்திற்குள் புகுந்து விடும், அவர் நடந்து வரும் காலடி சத்தம் கேட்கும் போதே சன்னமாக வயிறு எங்கள் எல்லோருக்கும் கலக்க ஆரம்பித்து விடும். அவரை பார்த்து பயப்பட ஒரு முக்கிய காரணம் அவர் பாடம் எடுக்கும் விதம்தான், அவர் கணக்கு பாடத்தை அவரே போட்டு எல்லாம் விளக்க மாட்டார், கேள்வியை போர்டில் எழுதி ஏதாவது ஒரு மாணவனை அழைத்து போட வைப்பார், அன்று எவனுக்கு சனியின் அனுக்ரகம் இருக்கிறதோ அவன் மாட்டுவான், ஒவ்வொரு தவறுக்கும் பின்பக்கம் பிரம்பு வந்து மோதி செல்லும். அவருக்கும் கருணைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, அழுதால் அடி சேர்ந்து விழும், வகுப்பில் அடி குறைவாக வாங்குபவர்கள் மிக சிலர்தான், அதில் நானும் ஒருவன்!


எனக்கு ஆங்கிலம் வராது, ஆனால் மற்றப்பாடங்கள் நன்றாக வரும், கணக்கில்  நல்ல ஆர்வம் உண்டு, சிலசமயம் ஐசக் வாத்தியார் யாராவது வந்து போடுங்கள் என்பார், அப்போது நான் எழுந்து சென்று போடுவேன். சிலசமயம் கணக்கு கடினமானது என்றால் அவரே என்னை அழைப்பார். ஆர்வதோடு சென்று போடுவேன், கூட ஒன்றிரண்டு அடியும் வாங்குவேன்! ஐசக் வாத்தியார் என்னை கண்டு கொண்டது முதல் மாதிரி தேர்வு சமயத்தில்தான். அதுவரை எழுந்து சென்று எல்லாம் கணக்கு போட சென்றதில்லை, எல்லோருக்கும் இருந்த பயம் எனக்கும் இருந்தது. தேர்வு முடிந்து விடைதாள்களை திருத்தி ஒவ்வொருவருக்காக கொடுத்து கொண்டிருந்தார், அது 50 மதிப்பெண் அளவுக்கான தேர்வு, 20 க்கும் கீழே இருப்பவர்கள் தாள்களை கையில் தராமல் கீழே வீசி கொண்டிருந்தார், என் பெயர் அழைத்ததும் நான் போய் அருகில் நின்றேன், தாளில் இருந்து பார்வையைவிட்டு நிமிர்ந்து என்னை பார்த்தார், " ஏன் எல்லா கேள்வியும் எழுதல " என்றார், உண்மையில் அதில் இருந்த இரண்டு முக்கியமான கேள்விகள் நடத்தும் போது நான் வர வில்லை, அம்மை காரணமாக 15 நாள் வரை வராமல் இருந்தேன், அவர் கேட்டதும் நடுங்கி இந்த காரணத்தையே சொன்னேன். அவர் தாளை என் கைகளில் அளித்தார். நான் தாளை பார்த்தபோது 15 என்று இருந்தது, அவர் திட்டாததும், தாளை தரையில் எரியாததும் எனக்கு ஆச்சிரியத்தை கொடுத்தது, பக்கத்தில் அமர்ந்திருந்த நண்பன் அகமது 23 வாங்கி இருந்தான், ஆனால் அவன் தாளை அவர் தரையில்தான் வீசியிருந்தார், அகமது கோபமாகி விட்டான், மெல்ல என் காதிற்கு மட்டும் கேட்கும் படியாக " இந்தஆள் லூசாடா " என்றான். நான் தாளை அவசரமாக திருப்பி பார்த்தேன், அவர் எனக்கு கைகளில் தாள் அளித்ததன் காரணம் புரிந்தது, நான் மொத்தம் 15 மதிப்பெண்களுக்குதான் விடை எழுதி இருந்தேன், எல்லாமே சரியான பதில்கள், முழு மதிப்பெண்கள், 15 மதிப்பெண்களுக்கு எழுதி அதை முழுமையாக பெற்றிருக்கிறேன், மகிழ்ச்சியாக இருந்தது.


ஆனால் அகமது ஐசக் வாத்தியாரை லூசு என்று சொல்ல இது மட்டும் காரணம் அல்ல, அப்படி ஒரு சந்தேகம் எங்கள் வகுப்பில் இருந்த எல்லோருக்கும் உண்டு, ஒரு நிகழ்வுதான் இதற்கு காரணம், அது நடந்து சில நாள் ஆகி இருக்கும், சட்டென வகுப்பில் இருந்த ஸ்பீக்கர் பேட்டியில் எச்எம் பேச ஆரம்பித்தார் " யாரும் பதறாமல், அவசரபடாமல் வகுப்பு விட்டு வெளியேறி மைதானம் பக்கம் வாருங்கள், ஆசிரியர்கள் மாணவர்களை சீக்கிரம் வெளியேற்றி மைதானம் பக்கம் கொண்டு வாருங்கள், அவசரம், பள்ளியில் குண்டு வைக்க பட்டுள்ளதாக சந்தேக எச்சரிக்கை வந்துள்ளது " என்றார். நாங்கள் அரக்கபரக்க எழுந்து ஓடினோம், ஆனால் பயம் என்று சொல்ல முடியாது, ஏற்கனவே சில மாதம் முன்புதான் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்து முடிந்து இருந்தது, கோவை குண்டுவெடிப்பு என்று அதற்கு பெயர் வைத்திருந்தார்கள், அதன் பிறகு இப்படி சட்டென ஏதாவது இப்படி புரளி வரும், மக்கள் அலறுவார்கள், பிறகு சற்று நேரத்திலேயே அது புரளி என்று தெரிந்து விடும். வகுப்பில் எழுந்து எல்லோரும் ஓடும் போது ஐசக் வாத்தியார் மட்டும் அப்படியே இருக்கையில் சாதாரணமாக அமர்ந்து இருந்தார். அவரிடம் அதிகமாக அடிவாங்கி பெயர் வாங்கி இருந்த மனோஜ் அவ்வளவு அவசரத்திலும் அவரிடம் சென்று " வாங்க சார் போவோம் " என்றார். அவர் சிரித்து " நீ போ, நான் வரேன் " என்றார்.


மாதிரி தேர்வுக்கு பிறகு நான் கணக்கில் தீவிர ஆர்வம் செலுத்தினேன், அவருக்கும் என்னிடம் வெளியே காட்டி கொள்ளாத விசேஷ அன்பு இருந்தது, அவர் காட்டி கொள்ள வில்லையே தவிர மாணவர்கள் எல்லோருக்கும் அது தெரிந்திருந்தது, அது என் மீது சிலர்க்கு பொறாமையும் அளித்தது, ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர் ஒவ்வொருவரையும் கவனித்தார், அவர்களுக்கு ஏற்ப அவர்களை வளர வைத்தார், ஆனால் ஒன்று அவரிடம் இருந்து பயின்றாக வேண்டும் அல்லது வகுப்பு விட்டு ஓடிவிட வேண்டும் என்ற நிலை இருந்தது, நாகராஜ் இவருக்கு பயந்து படிப்பை விட்டு வீட்டை விட்டு ஓடி போய் பிறகு கண்டுபிடிக்க பட்டு கடைசியில் படிப்பே வேண்டாம் என்று வேலைக்கு போய் விட்டான், அவனுக்கு வில்லன் இவர்!


அரை பரீட்சை வரை சந்தோசமாக போய் கொண்டிருந்த என் வாழ்விலும் சனிஸ்வரன் வந்து விளையாட ஆரம்பித்தார், எனக்கு அவரிடம் இருந்த பயம் போய் அசட்டு தைரியம் வந்தது, ஒருமுறை விடுமுறை எடுத்து ஊர்சுற்ற போய் விட்டேன், அன்று முக்கிமான தேற்றம் எடுத்திருந்தார் போல, எனக்கு தெரியவில்லை, மறுநாள் எப்போதும் போல சென்றேன். அவர் வகுப்பு தொடங்கி அவர் உள்ளே வந்ததும் என்னை பார்த்தார், " நேத்து ஏன் வரல " என்றார். "உடம்பு சரியில்ல சார் " என்றேன், நான் சொன்னது பொய் என்பதை போல பார்த்தார், அப்போது சனி என் நாவில் புகுந்து " சார், நான் நேத்து நடந்த பாடத்தை பார்த்து படிச்சுடறேன் " என்றேன். அவர் ஒரு நிமிடம் மவுனமாக நின்று " வெளிய போ " என்றார். நான் தயங்கி நின்றேன், அவர் உருமி " வெளிய போடா " என்றார், நான் பயந்து வேகமாக சென்று வெளியே போய் நின்றேன்.  பிறகு அவர் வழக்கம் போல பாடம் நடத்தினார், உள்ளே அழைக்கவே இல்லை.


அன்றிரவு எனக்கு தூக்கம் பிடிக்க வில்லை, அவமான படுத்தி விட்டார் என்று நினைத்தேன், பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன், யோசித்து யோசித்து நாளை வகுப்பில் செல்லாமல் வெளியேவே நின்று விட வேண்டும், அவர் அழைத்தால்தான் உள்ளே போக வேண்டும் என்று முடிவு செய்து தூங்கினேன், காலை முழுதும் அதுதான் நினைப்பாக இருந்தது, காலை இன்ட்ரெவல் முடித்து முதல் வகுப்பு கணிதம், நான் உள்ளே செல்லாமல் வெளியேவே நின்றேன், அகமது "வாடா உள்ள " என்றான், நான் முகத்தை வீராப்பாக வைத்து " நான் வரல " என்றேன், அவன் " நீ ஐசக் ட்ட உதை வாங்க போறது நிச்சயம்டா " என்று திட்டி உள்ளே சென்றான், வகுப்பில் எல்லோரும் என்னை பார்த்தனர், ஆனால் யாரும் ஏதும் கேட்க வில்லை. ஐசக் வாத்தியார் வருவது தூரத்தில் தெரிந்தது, எனக்கு ஒன்னுக்கு வருவது போல இருந்தது, ஐந்து நிமிடம் முன்புதான் ஒன்னுக்கு போயிருந்தேன்! அவர் அருகில் வரவர கால் நடுங்க ஆரம்பித்தது, என்ன ஆனாலும் அவர் அழைக்காமல் உள்ளே செல்ல கூடாது என்று நினைத்தேன். அருகில் வந்தவர் என்னை ஒரு கணம் நின்று பார்த்தார், பிறகு ஏதும் சொல்லாமல் உள்ளே சென்று விட்டார். பாடம் எடுக்க தொடங்கி விட்டார், நேரம் செல்ல செல்ல என் உறுதி குறைந்து கொண்டே வந்தது, அவர் என்னை பொருட்படுத்தவே இல்லை, கடைசில் அழைக்க மாட்டாரா என்று ஏங்கினேன், அப்போதும் அவர் அழைக்காமல் உள்ளே போக கூடாது என்ற எண்ணம் இருந்தது. வகுப்பு முடிந்தது. அவர் வெளியே வந்தார், என்னை திரும்பி கூட பார்க்க வில்லை, நொந்து போய் விட்டேன்.


தூக்கம் இன்றும் போனது, தைரியம் எல்லாம் காணாமல் போய் விட்டது. அடுத்தநாள் வந்தது, வகுப்பு வந்தது, சத்தம் இல்லாமல் அவர் வரும் முன்பே போய் என் இருக்கையில் அமர்ந்து கொண்டேன், வந்தவர் நேராக என்னை பார்த்தார், தொடர்ந்து அவர் பார்க்க வேறு வழியில்லாமல் எழுந்து நின்றேன், அவர் நிதானமாக " வெளிய போ " என்றார். நான் பலவீனமான குரலில் " சாரி சார் " என்றேன் அவர் நான் சொல்லி முடிக்கும் முன்பே " வெளிய போடா " என்றார். சட்டென எங்கிருந்தோ வந்த ரோசத்துடன் எழுந்து கோபமாக வெளியே சென்றேன். அவர் பிறகு இது எதுவும் நடக்காதது போல பாடம் எடுக்க துவங்கி விட்டார். கோபமும் அழுகை மனநிலையும் வந்தது, இனி அவர் கூப்பிடாம உள்ள போகவே கூடாது என்று முடிவு செய்தேன், என்ன ஆனாலும் சரி என்று எண்ணிக்கொண்டேன், தொடர்ந்து அந்த வாரம் முழுதும் உள்ளே செல்லாமல் வெளியேவே தரையில் அமர்ந்து கொண்டேன், அவர் கூப்பிடவே இல்லை, அடுத்தடுத்த வாரங்களும் அது நீண்டது, நான் மன்னிப்பு கேட்டால் உள்ளே விடுவார் என்று அகமது சொன்னார், நான் அவனிடம் " இந்த வகுப்பே எனக்கு வேணாம்டா " என்றேன். அவர் வகுப்பில் உள்ளே செல்லும் போதும் வெளியே செல்லும் போதும் எழுந்து நிற்பேன், ஆனால் நான் இருந்ததையே அவர் மறைந்து விட்டவர் போல நடந்து கொண்டார்.


பி.டி வாத்தியார்தான் என்னை ஐசக் வாத்தியார் வெளியே அனுப்பியதை முதலில் கண்டுபிடித்தார். நடந்து சென்றவர் நான் வெளியே இருப்பதை பார்த்து என்னை அழைத்தார் " ஏ வெளிய உட்கார்ந்து இருக்க " என்றார். "இல்லை சார் சும்மா தான் "என்றேன், அவர் முறைக்க பிறகு நடந்ததை சொன்னேன் " படிப்பை கெடுத்துக்காத, நல்லா படிக்கறவன் நீ " என்றார். நான் ஒன்றும் சொல்லாமல் நின்றேன், " சரி போ " என்று சொல்லி விட்டு கிளம்பினார்.


அந்த ஆண்டு முழுதும் நான் பிறகு அவர் வகுப்பிற்குள் போகவே இல்லை, அவரும் அழைக்க வில்லை, நானும் உள்ளே வருகிறேன் என்று கெஞ்ச வில்லை, வகுப்புகள் முடித்து பொது தேர்வுக்கு முன்பான ஒரு தயார் படுத்தலுக்கான மாதிரி தேர்வு நடந்தது. கணக்கு தேர்வில் தேர்வு ஹாலில் சட்டென உள்ளே வந்தவர்,எழுதி கொண்டிருந்த என்னை பார்த்து " என் பாடத்தை எழுதாத, வெளிய போ " என்றார். சட்டென அழுது விட்டேன், மொத்த தைரியமும் ஓடி போனது, அழுது நின்று கொண்டு " சாரி சார் " என்றேன், அவர் ஏதும் சொல்லாமல் வெளியே சென்று விட்டார். வகுப்பில் இருந்த ஆசிரியர் என்னிடம் எழுது என்பது போல சைகை காட்டினார்.


தேர்வுகள் முடிந்து வெறும் வகுப்பு சில நாள் இருந்தது, பொது தேர்விற்கான நாட்கள் ஒரு வாரம்தான் இருந்தது, ஹால் டிக்கெட் கொடுப்பது பற்றி தேர்வு ஹாலில் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி எல்லாம் எச் எம் வகுப்பிற்கு நேராக வந்து பேசி சென்றார். எனக்கு வீட்டில் பத்தாவது மேல் படிக்கும் சூழல் இல்லை, வேலைக்கு போவது என்று இருந்தமையாமல் மற்றவர்களிடம் இருந்த மார்க் சார்ந்த ஆர்வம் எனக்கு இல்லாமல் இருந்தது, எப்படியாவது பாஸ் ஆனால் போதும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. அதனால் மற்றவர்களை விட நான் பதட்டம் இல்லாமல் இருந்தேன். மதியம் உணவு முடிந்து வகுப்புஅறையில் அமர்ந்து நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தேன், முந்திய நாள் நடந்த கிரிக்கெட் பற்றித்தான் பேச்சு ஓடிகொண்டிருந்தது, அசாருதினை நான் திட்ட அகமது வெங்கடபதி ராஜுவை திட்டி கொண்டிருந்தான். அப்போது ஒரு வேறுவகுப்பு பையன் உள்ளே வந்து " சிவசங்கரன் யாரு, ஐசக் மாஸ்டர் வந்து பார்க்க சொன்னாரு " என்றான், சிவசங்கரன் நான்தான், மொத்த 10 ம் வகுப்பு மூன்று வகுப்பிலும் ஒரு சிவசங்கரன் நான் மட்டுமே இருக்கிறேன். பயந்து வீட்டேன். கண்கள் கலங்கி விட்டன, அகமது " நேரா போய் கால்ல விழுந்துடுடா " என்றான்.


அவர் இருந்த தொழிற்கல்வி கூட அறைக்கு சென்றேன், உடல் என் கட்டுப்பாட்டில் இல்லாதது போல இருந்தது. அறைக்குள் அவர் சிகரெட் பிடித்து அமர்ந்திருந்தார். நான் வாசலில் அவரை பார்த்தப்படி உள்ளே செல்லாமல் நின்று கொண்டேன், என்னை பார்த்ததும் உள்ளே வா என்பது போன்று தலை அசைத்தார். டேபிள் அருகில் போய் நின்று கொண்டேன். என்ன சொல்வது என்று தெரியாமல் அவரை பார்த்து கொண்டிருந்தேன், கண்களில் எந்த நேரமும் அழ நீர் காத்திருந்தது. அவர் சிகரெட் அனைத்து, மீதியை அருகில் இருந்த பிளாசிட்டிக் குப்பை தொட்டியில் போட்டார். சில கணம் ஏதும் பேசாமல் இருந்தார். பிறகு என்னை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்து " நீ செண்டம் வாங்க கூடியன்னு நினைச்சேன் , லைப்ப வீணாடிச்சுடாத, போ, ஒழுங்கா படி " என்றார். பிறகு மேற்கொண்டு ஏதும் சொல்லாமல் "போ" என்றார்.


பொது தேர்வுகள் நடந்தன, ஆங்கிலத்தில் சரியாக எழுத வில்லை, மீது பாடங்கள் சுலபமாகதான் இருந்தன, கணக்கில் கிராப் தப்பு செய்து விட்டேன் என்று வெளியே வந்து நண்பர்களுடன் பேசும் போதே தேடிந்தது, - ஐ + என்று நினைத்து கணக்கு போட்டு கிராப் போயிருந்தேன், அது முற்றிலும் தவறாக போயிருந்தது, அந்த வருத்தம் ஒரு நாள் முழுதும் இருந்தது, மற்ற பாடங்கள் பரவாஇல்லை ரகத்தில் எழுதி இருந்தேன். பிறகு தேர்வுகள் முடிந்தது, நான் தேர்வு முடிந்த கையொடு ஒரு பால் கம்பெனியில் வேலைக்கும் சேர்ந்து விட்டேன்.


இரு மாதங்கள் முடிந்து தேர்வு முடிவுகள் வந்து இருந்தன, நான் ஆங்கிலத்தில் பெயில் ஆவேன் எண்ணி இருந்தேன், ஆச்சிரியமாக 62 வாங்கி இருந்தேன், ஐந்து பாடங்கள் என 500 க்கு 408 வாங்கி இருந்தேன், எப்படி வாங்கினேன் என்பது எனக்கே ஆச்சிரியமாக இருந்தது, அம்மா மேல படி என்று சொல்லி மேலும் ஆச்சிரியம் கொடுத்தாள். ஆனால் எனக்கு தேர்வு முடிவில் இருந்த பெரிய திருப்தி கணக்கில் 91 மதிப்பெண் எடுத்து இருந்தேன், கிராப் சரியாக இருந்தால் 100 எடுத்திருப்பேன் போல. நான் பள்ளி நோக்கி கிட்டத்தட்ட ஓடினேன், முதல் மதிப்பென் எடுத்த மாரியப்பன் நின்று கொண்டிருந்தான், 480 அவன் பொறாமையாக இருந்தது. ஆனால் அவன் அறிவியலில் மார்க் குறைந்து விட்டது என்று புலம்பி கொண்டிருந்தான். நான் நேராக தொழிற்கல்வி கூட அறை நோக்கி ஓடினேன். தூரத்திலேயே ஐசக் வாத்தியார் இருப்பது தெரிந்தது. போய் வாசலில் நின்று கொண்டேன்.


ஏதேச்சையாக வாசல் பார்த்தவர் என்னை பார்த்து சற்று ஆச்சிரியம் அடைந்தார், வா என்பது போல முகஅசைவு காட்டினார். நான் அருகில் சென்று நின்றேன். என்ன என்பது போல பார்த்தார். நான் திணறல் மொழியில் " சார் கணக்குல 90 வாங்கிட்டேன்  சார் " என்றேன். அவர் கண்களில் ஈரம் படர்வது போல தெரிந்தது, எழுந்து நின்றார், பிறகு டேபிளில் இருந்து நகர்ந்து என் பக்கம் வந்தார், கைகள் நீட்டினார், நான் அவர் ஹான்சேக் தர கை நீட்டுகிறார் என்று எண்ணி என் வலது கை நீட்டினேன், அவர் தன் இரு பெரிய கைகளை கொண்டு என் கைகளை அனைத்து கொண்டார், " நல்லா படி, போ " என்றார்!






 

விமர்சனம் - சில எண்ணங்கள்

 ( இரு ஆண்டுகள் முன்பு எழுதியது ) தூரன் விழாவில் பிகே ராஜ சேகரன் அவர்கள் உரையாடல் நிகழ்வில் அவரிடம் கேட்க பட்ட ஒரு கேள்வி மற்றும் அதற்கு அவர...