Friday, June 15, 2018

முதற்கனல் வாசிப்பனுபவம் 6 கடைசி பகுதி

நாவலின் பிராதன அம்சம் என இதை நினைக்கிறேன் :
பாரத நிலப்பரப்பில்  இருக்கும் கொற்றவை (  கொலை தெய்வம் )  பற்றிய படிமத்தை  அம்பை, கத்ரு  சத்யவதி ,மற்றும் சில பெண் பாத்திரங்கள்  வழியாக விரிவாக பேச முற்படும் நாவல் என முதற்கனல் நாவலை வகை படுத்தலாம் .

இந்த நாவல் தேவியை (  சக்தி )யை ஆதாரமாக கொண்டது , தேவி நிகழ்த்தும் நாடகம்தான் பிரபஞ்ச தோற்றம் அழிவு என .

சக்தி தன்னிலிருந்து  உருவான சிவனை அழிப்பதன் வழியாக பிரபஞ்ச அழிவை உருவாக்கி ,மீண்டும் பிரபஞ்ச தோற்றத்தை  நிகழ்த்தும்   சுழற்சியை இந்நாவல் பல கதைகள் வழியாக சொல்கிறது என சொல்லலாம் . முக்கியமாக கடைசியில் வரும் கத்ரு கதை , கார்த்தியேயினி  கதை , அம்பை பீஷ்மரை கொல்ல நினைக்கும் கதை , சத்யவதி ஆண்களை தன் பகடைகளாக  ஆக்கி தனது நோக்கங்களை நிறைவேற்றி  செல்லும் கதை என. முக்கியமாக கொற்றவை என நாவல் திரும்ப திரும்ப சொல்லும் படிமம் .

அழிவிற்கான காரணம் என கத்ரு கதை தன்னகங்காரம் என சொல்கிறது ( தன்னகங்காரம் என்பது பிரபஞ்சத்தின்  ஒரு உறுப்பு  என தன்னை என்னாது , தன்னை ஒரு சுயமாக எண்ணுதல்  எனும் அர்த்தத்தில் சொல்கிறேன் ) , இதை அம்பை பீஷ்மர் கதை வழியாக இந்நூல்  ஆராய்கிறது  என சொல்லலாம் , பீஷ்மரின் மனம் என்பது  தனக்கிருக்கும் கடமைகளினால் ஆனது என சுருக்கமாக சொல்லலாம் , இதை தவறு என சொல்லிட முடியாது , ஆனால் இன்னொரு கோணத்தில் அப்படி எண்ணுவது படைப்பின்  நிகழ்விற்கு எதிராக நிற்கும் ஒரு எண்ணம் , 'படைப்பின் நிகழ்வு திசைகளை  நான் தீர்மானிப்பேன் ' என்பதை சொல்வதை போல , இந்த எண்ணம் எப்படி அழிவை நோக்கி கொண்டு செல்கிறது என்பதை விவரிக்கும்  கதை என இதை சொல்ல முடியும் .

இதில் ஒரு சுவாரஸ்யமான முரண்  இருக்கிறது , பீஷ்மர் பிரம்மச்சரியர்  , ஆனால் இந்த பிரம்மச்சர்யம்  தன்னியல்பான  ஒன்று அல்ல , சூழல் அளித்த ஒன்று அது , இந்த இடத்தில் வியாசரின்  மகனான  சுகனை  வைக்கலாம் , அவர் அவரது காமமற்ற  இயல்பு என்பது தான் என்ற ஒன்றை உணராததால்  நிகழ்வது , அவர் பிரபஞ்சத்தில் இருந்து தன்னை பிரித்து கொள்ள வில்லை .

தான் என எண்ணம் கொண்டவர் அந்த எண்ணம் அழிவது  பெண்ணுடன்  கலப்பதன்  வழியாக , பீஷ்மர் தான் எனும் எண்ணம் கொண்ட பிரம்மச்சாரி  , இது ஒரு முரண் , இந்த முரண் தான் அழிவை நோக்கி நடத்தும் புள்ளி .

........

இதை தாண்டி இந்நாவல்  துணை பேசுபொருட்களாக  நிறைய விஷயங்களை பேசுகின்றன  , முக்கியமாக பாரத நிலத்தின் சித்திரம்  , இன்னொன்று இந்நாவலில் பிரபஞ்ச நிகழ்வின்  (  இயக்கத்தின் , நகர்வின் )  ஊக்கு  விசையாக காமம் எப்படி இருக்கிறது என்பதை கதைகள் வழியாக அழகாக காண முடிகிறது .

......

கடைசியாக

இதில் இருக்கும் முக்கியமான மறை பேசுபொருள் என்பது அன்னை மீதான காமம் என்பதை சொல்லலாம் , அதை மேற்கு  ஈடிபஸ் காம்ப்லக்ஸ் என குற்ற உணர்வு நோக்குடன்  அணுகுகிறது என எண்ணுகிறேன் , ஆனால் இந்திய மரபில் இந்த உணர்வு மேல்நிலையாக்கம்  செய்யப்பட்டு நேர்மறையான ஒன்றாக அணுகுகிறது  . சக்தி வழிபாடு , யோனியை பிரபஞ்ச படைப்பின் குறியீடாக எண்ணுவது எல்லாம் இந்த உணர்வினை  மேல்நிலையாக்கம் ஆக்கப்பட்ட  விஷயங்கள்தான் .

சத்யவதி -  சித்ராங்கதன் ,விசித்திரவீரியன் கதை இந்த விஷயத்தை மேல்தளத்தில் பேசுகிறது என்றால் அம்பை -  பீஷ்மர் கதை  கதை அடித்தளத்தில்  வைத்து பேசுகிறது . அம்பை படகில்  பீஷ்மரிடம் கங்கையில்  விழுந்து சாவேன்  என்று சொல்வது அம்பையை பீஷ்மரின்  அன்னையுடன்  இணைக்கும் ஒரு இடமாக  கூட இருக்கலாம் .

No comments:

Post a Comment

ஆசிரியர் ( சிறுகதை )

 90 ஆண்டு கால கட்டடம் அது, செங்கல்க்கு பதில் கற்கள் அடுக்கி கட்டப்பட்டிருக்கும், மேலே ஓட்டு கூரை, சுவர் உயரம் எப்படியும் 15 அடி வரும், கற்கள...