Thursday, May 7, 2020

ஞானகங்கை நூல் முன்வைத்து -2

அரசு அதிகாரம் வழியாக மக்களுள் மாற்றங்களை நிகழ்த்தி விட முடியாது,  மாறாக மக்களுக்குள் சென்று விழுப்புணர்வு ஏற்படுத்துவதன் வழியாகவே மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்கிறார் கோல்வால்கர்,  இது எனக்கு படிக்க ஆச்சிரியமாக இருந்தது, ஏனெனில் இப்போது ஆட்சியில் இருக்கும் bjp சங்கத்தின் குழந்தை ! அதேசமயத்தில் நாட்டை நேசிக்கும் சுயம்சேவர்களை சங்கம் உருவாக்குகிறது, அவ்வாறு உருவாகி வந்தவர்கள் நாட்டை ஆளும் இடத்திற்கு வருகிறார் என்பதாக இதை எடுத்து கொள்கிறேன்.

இந்த நூலில் ஒரு சுயம்சேகவர் எப்படிப்பட்ட பண்புநலன்களுடன் இருக்க வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்றெல்லாம் விளக்குகிறார்,  பெரும்பாலும் மரபின் தொன்ம கதைமாந்தர்களை வைத்து, மகாபாரத வீரர்கள்,  ராமர்,  புராண கதாபாத்திர வீர புருஷர்களை வைத்து என,  மேலும் சிவாஜி போன்ற  இந்து மன்னர்களை இந்து வரலாற்று வீரர்களை எல்லாம் முன்வைத்து விளக்குகிறார்.  இந்திய நிலத்தின் மரபை இந்த நிலத்தின் மைந்தர்கள் பேணுவதே என்பதே இயல்பானதாக இருக்கும், மேற்கிலிருந்து கடன்வாங்கி பிரதி எடுக்கும் இயல்புகள் போலித்தனம் கொண்டவை, அவை நம்மை முன்னேற்றாது,  தவிர்க்க வேண்டியவை என்றெல்லாம் சொல்கிறார்.  இதற்கு சற்று இணையான ஒரு விவாதம் சமீபத்தில் ஒரு இலக்கிய விவாத அரங்கில் நிகழ்ந்தது,  தமிழ் நவீன கவிதைகளில் இந்திய தொன்மத்தின் படிமங்களை வேண்டுமென்றே தவிர்க்கும் போக்கு பற்றி விவாதிக்க பட்டது,  அப்படி தவிர்த்து மேற்கின் படிமங்களை பயன்படுத்தும் பொழுது கவிதை மேலெழாமல் ஆகிவிடுகிறது என்ற வாதம் வைக்கப்பட்டது, அதற்கு காரணமாக தனது சொந்த ஆழ்மன படிமங்களை பயன்படுத்தும் பொழுதே இக்கவிதைகளில் உச்சங்கள் நிகழும் சாத்தியங்கள் இருக்கும் என்று சொல்லப்பட்டது.  கோல்வால்கர் சொல்வதும் கிட்டத்தட்ட இதேதான், இவர் கவிதை எனும் இடத்தில் மனிதனின் மனதை, இயல்பை, நெறிமுறையை,  வாழ்க்கையை, நோக்கத்தை முன்வைக்கிறார் அவ்வளவுதான். என்னளவில் இந்த நிலைப்பாடுகள் வரை கோல்வல்கரின் வாதங்களை சரி என்றே ஏற்கிறேன்.

கோல்வால்கரின் கருத்துக்களில் இரண்டு விஷயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை,  ஒன்று அவர் இந்திய தேசியத்தை இந்து பணப்பண்பாட்டின் தேசியமாக முன்வைப்பது,  இதை தற்கால சூழல் வைத்து சொல்கிறேன்,  இன்று இந்தியா என்பது அனைத்து மதங்களையும், தரிசனம்களையும், வாழ்க்கை முறைகளையும் அனுமதிக்கும் ஒன்றாக பார்க்கும் ஒரு தேசியத்தில் நிற்கிறது,  இதை மதசார்பின்மை பண்பாக முன்வைக்கிறது,  இந்த நிலைப்பாட்டிலிருந்து இந்தியா பின்னகரும் என்று தோன்ற வில்லை.  ஆனால் கோல்வால்கர் முன்வைக்கும் கருத்துக்கள் முக்கியமானவை,  அவர் இந்தியாவின் ஜீவனை சரியாகவே அடையாளப்படுத்தி முன்வைக்கிறார் என்றே நினைக்கிறேன்.

என் புரிதலில் இந்தியா தன் இயல்பாக இந்து மரபின் இயல்புகளை வெளிப்படுத்த வேண்டும் என்கிறார்,  வலுவான நாடாக,  அந்த வலுவின் நிறை கொண்டு பணிவை வெளிப்படுத்தும் நாடாக இருக்க வேண்டும் என்கிறார்,  முக்கியமாக தனித்து பிரியும் இயல்புகளை இந்நாட்டில் அனுமதிக்க கூடாது என்கிறார்,  இஸ்லாம் அப்படி தனித்து பிரிந்து நிற்கும் மதம் என்பதால் அதை எதிர்க்கிறார்,  இப்போது வைத்து யோசிக்கும் போது கூட இந்த பார்வையில் உண்மை உள்ளது என்றே தோன்றுகிறது, ஏனெனில் இன்று இஸ்லாமியர்கள் தங்களை பொது சூழலுக்குள் இணைத்து கொள்ளாமல் தனித்தே இயங்குகிறார்கள் பெரும்பாலும்.  அதேசமயத்தில் கோல்வால்கர் தனிப்பட்ட மத நம்பிக்கை விஷயத்தில் இருக்கும் சுதந்திரத்தை ஆதரிக்கவே செய்கிறார்,  உதாரணமாக ஒரு இஸ்லாமியர்கள் தன் வழிபாட்டில் தன்  மதத்தில் இருந்து செயல்படுவது அவர் சுதந்திரம், அதை எவ்வவகையில் எதிர்க்கவில்லை என்கிறார், ஆனால் ஒரு சமூகம் என்று வரும்பொழுது இந்த நிலத்தின் பண்பாட்டில் நிற்கும் பொழுது மட்டுமே அது சரியானதாக இருக்கும்,  எனவே பண்பாட்டு தளத்தில் இந்த மரபிற்குள் இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் வர வேண்டும் என்கிறார், இந்த கருத்து நிலைப்பாடு எனக்கு ஓரளவிற்கு  ஏற்புடையதே.  ஆனால் தற்கால சூழலில் இப்படியான இந்துக்கள் உட்பட எல்லோரிலும் மரபை நேசிக்க வேண்டும் எனும் கட்டாய சூழலை எதிர்பார்க்க முடியாது என்றே நினைக்கிறன்.  நவீன சூழலில் வெறும் நம்பிக்கை மட்டும் சார்ந்து மட்டும் அல்லது அப்படியானால் ஒரு நிலைப்பாட்டில் மட்டும் எல்லா மக்களையும் அடைக்க முடியாது என்று நினைக்கிறன்,  அதேசமயம் தற்பொழுது வழக்கில் இருக்கும் இந்திய தேசியம் எல்லோரையும் உள்ளடக்கிய ஒன்று இதற்குள் நின்று அல்லது இதை மேம்படும் வழியாக மட்டுமே ஏதேனும் மாற்றங்களை உருவாக்க முடியும் என்று நினைக்கிறேன்,  அதாவது இந்த மதசார்பின்மை தேசியத்தில் உருவாகும் சிக்கல்களை இந்த தேசியத்தில் நின்று கொண்டே எதிர்கொள்ள முடியும் என்று எண்ணுகிறேன்.

அதாவது இப்படி சொல்லலாம் இந்தியா வெறும் இந்துக்கள் நாடு என்றிருந்தால் பிற மதத்தினரிடம் உரையாடல் நிகழாமல் போகும்,  இப்போதைய சூழல் என்பது ஒரு உரையாடலுக்கான ஒரு களம்,  இந்து மரபை இந்த பொது களத்திற்குள் கொண்டு வருவதன் வழியாக பிற மதத்தினரை அவர்களது மதம் தாண்டி விவாதத்திற்குள் கொண்டு வர முடியும் என்று எண்ணுகிறேன்,  இப்படியாக மரபை,  மரபின் கனிகளை எல்லோருக்கும் கொண்டு செல்லும் சாத்தியம் இதில் உண்டு, உதாரணமாக யோகா, யோகாவில் மதத்தின் சாயலை தவிர்க்கும் பொழுது அது எல்லோருக்கும் பொதுவானதாக ஆகிறது, அப்படி ஆகும் பொழுது உலகெங்கும் போகிறது,  அதனால் மாற்றங்களும் நிகழ்கிறது,  இப்படியாக இந்து மரபில் இருக்கும் நன்மைகளை பொதுவில் எடுத்து வைக்கும் பொழுது அதில் அனைவரையும் சென்றடையும் வாய்ப்பு உள்ளது, அப்படி ஆகும் பொழுது இந்துக்கள் மட்டுமல்ல எல்லோரையும் இந்து மரபின் மனநிலைக்குள் கொண்டு வரும் சாத்தியம் இதில் உள்ளது,  ஈஷா யோகா,  மகாபாரதத்தை வெண்முரசாக மறுஉருவாக்கம் செய்து பொதுவில் முன்வைப்பது எல்லாம் இப்படியான செயல்பாடுகள்தான்,  ஆனால் இவை உடனடி பலன்களை தராது என்பதும் உண்மைதான்,  ஆனால் நீண்ட கால அளவை கணக்கும்போது கண்டிப்பாக மாற்றங்களை உருவாக்கும். உடனடி தீர்வுகளை அரசு அதிகாரம்  வழியாகவே நிகழ்த்த இயலும்,  ஆனால் அவை தற்காலிக தீர்வுகளாகவே இருக்கும்.

கோல்வால்கருக்கு இந்திய பிரிவினை மிகுந்த துன்பம் கொடுத்த ஒன்று,  அதை சற்றும் அவரால் ஏற்க முடியவில்லை என்பது இந்த நூலில் விரிவாக அறியமுடிகிறது,  பாகிஸ்தான் பிரிவினையை "அன்னையின் உடலை வெட்டுவதை போல "என்கிறார்,  ஆதிக்கம் அற்ற சுதந்திரமான மத சூழல் என்பது இந்த நிலத்தின் இயல்பு,  இந்த நிலத்தின் இது வரையிலான மக்கள் தங்களுக்குள் உரையாடி இந்த ஆன்மீக சூழலை உருவாக்கி வைத்திருந்தார்கள்,  அந்நிய படையெடுப்பால் அது பாதிப்பிற்குள்ளானது,  பிறகு சுதந்திரம் பெற்ற பிறகு மீண்டெழும் என நினைக்கும் பொழுது நிலமே துண்டு துண்டாகி போனது , இப்போது கையில் இருக்கும் நிலம் இந்தியா, இதிலாவது இந்த மண்ணின் ஆன்மீக மரபான மனநிலையை அதன் ஆண்மை இயல்பை மீட்டெடுக்க வேண்டும் / இதுதான் கோல்வால்கர் சொல்வது.  மேலும் இப்போதிருக்கும் நிலம் கூட அந்நிய சக்திகளின் சார்பாக இங்கிருக்கும் கரங்களால் துண்டாகும் சாத்தியம் உள்ளது, அப்படி நிகழாமல் இருக்க பார்த்து கொள்ள வேண்டும் என்கிறார்.  இவர் நோக்கில் இவர் வாதங்கள் சரிதான், ஆனால் இப்படி இந்த மதம் சார்ந்த இந்தியா மீதிருக்கும் இந்த சிக்கலை நிரந்தரமாக வெல்ல அந்த மதங்களை இந்து மதம் வெல்லும் போது மட்டுமே தீரும் என்று நினைக்கிறேன்,  அதற்கேற்ற விதத்தில் இந்து மதம் மாற்றி கொள்ள வேண்டும் என்று நினைக்கிறன், எப்படி ஆங்கில மருத்துவம்,  உயர் தொழில் நூட்பம் அனைவரையும் சென்றடைந்ததோ அது போல இந்து மதமும் உலகெங்கும் சென்றடைய வேண்டும், அப்படி சென்றடையும் விதத்தில் தன்னை மாற்றி கொள்ளும் பொழுது மட்டுமே அந்நிய மதம் சார்ந்த சிக்கல்கள் இந்த நிலத்தில் இருந்து நீங்கும்,  இன்னும் வெளிப்படையாக முன்வைக்க வேண்டுமெனில் இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவரும் இந்துக்களாக ஆகும் பொழுதும் அந்நிய நாடுகள் இந்து மதத்தை கொண்டிருக்கும் பொழுதும் மட்டுமே நமக்கு இருக்கும் பிரச்சனைகள் நிரந்தரமாக தீரும்,  இன்றைய சூழலில் மதம் எனும் கட்டுக்குள் இருந்து இந்து மரபின் செழுமையை வெளிக்கொணர்ந்து அனைவருக்கும் ஒன்றாக ஆக்குவதன் வழியாக மட்டுமே அந்த சாத்தியத்தை அடைய முடியும், கண்டிப்பாக கடினமான பணிதான், ஆனால் வரலாற்றை நோக்கும்பொழுது முடியாதது அல்ல என்றுதான் தோன்றுகிறது.

மேலே நான் சொன்னது கூட பிழையான பார்வைதான், சரியான பார்வை என்பது மக்களை மதத்தின் பிடியில் இருந்து வெளியே கொண்டு வருவது,  மண்ணின் இயல்பை அவர்களின் கொண்டு சேர்ப்பது, இவ்வழியாக ஒருங்கிணைப்பை உருவாக்குவது.  இதில் முக்கியமான விஷயம் இந்த நிலத்தின் மரபை இந்து மத பின்னணியில் வைத்து கொண்டு செல்லாமல் மத அம்சங்களை விடுத்து பொதுவான ஒன்றாக மாற்றி முன்வைக்க வேண்டும்,  இதை இந்து மதத்தில் இருந்து பிரித்து எடுத்து வெளியே எடுத்து செல்லப்படுகிறது என்ற நோக்கில் பார்க்க வேண்டியதில்லை, இந்திய மரபு எனும் இந்து மரபு  எல்லோரிடமும்  செல்கிறது என்ற நோக்கில் அணுகினாலே போதும், இதில் எந்த நோக்கிலும் இந்த செயல் வீழ்ச்சியை தரும் என்று என்ன வேண்டியதே இல்லை,  அப்படி ஆகவே ஆகாது. இந்த நோக்கில் இந்தியர்கள் தங்கள் மரபை உணர்ந்து அதை அனைவரும் கொண்டு செல்ல வேண்டும் என்று முனைந்தால் கண்டிப்பாக மாற்றங்கள் நடக்கும். மாறாக இந்து மதத்தை பிற மதங்களிடம் இருந்து தற்காத்து கொள்வது என்று போகும்பொழுது நாம் மனதளவிலும் சுருங்கி போகவே வாய்ப்பதிகம்.

மேல் சொன்னவை அனைத்தும் என் எண்ணங்களே,  கோல்வல்கரின் கருத்துக்களை முன்வைத்து அது சார்ந்து சேர்த்து இதில் சொல்லி வருகிறேன், அவ்வளவே.

ராஷ்டிரிய சேவா சங்கம் வெளியில் இருந்து பார்க்கும் பொழுது எனக்கு ஒரு ராணுவத்தை போலவே தோன்றுகிறது,  ஒரே மனதை கொண்டவர்கள் இதில் உள்ளவர்கள் பெரும்பாலும்,  என் நோக்கில் இந்த அம்சத்தில் நிறையும் உள்ளது குறையும் உள்ளது,  நிறை என்பது அபாரமானது ஒருங்கிணைப்பு சாத்தியம், எந்த இடரையும் இந்த சாத்தியம் மூலம் வெல்ல முடியும், மேலும் எந்த ஒரு நோக்கத்தையும் இப்படி ஒருங்கிணைவாகி சாத்தியமாக்கி காட்டிவிட முடியும். இப்படி ஒத்த மனநிலை கொண்டவர்கள் ஆகிறார்கள் என்பது சுவாரஸ்யமான ஆராய்தலுக்குரிய விஷயம்,  தேசத்தை அன்னையாக வணங்கும் மனநிலை வழியாக இவர்கள் ஒன்றாகிறார்கள்,  ஒரே தெய்வத்தை வழிபடும் பக்தர்களை போன்றவர்கள்தான் இவர்கள்,  கோல்வால்கர் உருவாக்கியது ஒரு பக்கதர்கள் கூட்டத்தை என்றும் கூட சொல்லலாம், கோல்வால்கர் மரபில் இருந்து வாழ்க்கைமுறையை எடுத்து அதை தேச அன்னையை நோக்கி சற்று தவமைத்து ஒரு எளிதான சூத்திரத்தை அளிக்கிறார்.  அதாவது இந்திய வாழ்வியல் முறையான அறம் பொருள் இன்பம் வீடு என்பதை அறம் வழியாக பொருள் இன்பத்தை தேடுவதை அப்படியே முன்வைத்து விடுகிறார்கள், வீடு ( முக்தி ) என்பதைத்தான் சற்று தகவமைக்கிறார், ஆனால் அதுவும் மரபில் இருந்து எடுத்த ஒரு வழிமுறைதான்,  அதாவது முக்தி என்பதை இறைவனை வழிபடுவது, அது வழியாக அடைவது என்று சொல்லலாம்,  இந்த அடைதலுக்கான வழியைத்தான் தேச வழிபாட்டோடு இணைக்கிறார், அதாவது இறைவனை வழிபடுவதை அத்வைத நோக்கில் முதலில் முன்வைக்கிறார், அத்வைத நோக்கில் எல்லா உயிர்களிலும் இந்த பிரபஞ்சம் முழுவதிலும் இருப்பது இறைவன்தான், இதை கோல்வால்கர் எடுத்துக்கொண்டு "எனவே பிற உயிர்களை ( மனிதர்களை ) ஆராதிப்பது என்பது இறைவனை ஆராதிப்பதுதான் என்கிறார்,  இது இந்து மதத்தின் பற்பல ஞானிகள் ஏற்கனவே சொன்னதுதான், அதையெல்லாம் கூட இந்த நூலில் உதாரணம் காட்டுகிறார்,  இதற்கு பிறகு இருக்கும் இணைப்புதான் முக்கியமானது,  அதாவது இறைவன் எனும் இடத்தில் பாரத அன்னையை முன்வைக்கிறார்,  பாரதத்தின் மைந்தர்களை தன் சகோதரர்களாக பிற மனிதர்களாக கொண்டு அவர்களுக்கு சேவை செய்வதன் வழியாக இறைவனை அடையமுடியும் என்கிறார்,  இதன் வழியாக இந்(து )தியர்களுக்குள் ஒருங்கிணைவை முன்வைக்கிறார்.  இது நல்ல வழிமுறைதான்,

பாரதத்தை ஆன்மீகபூமி என்று எண்ணுவது முதலில் இருந்தே இருக்கும் உணர்வு ஆனால் பாரத நிலத்தை மட்டும் ஓர் அன்னையாக ( பாரத அன்னை ) நோக்கும் வழக்கம் சுதந்திர கால உருவாக்கம் என்று நினைக்கிறேன், . அதே சமயத்தில் நிலத்தை பூமாதேவி என வழிபடும்  , மேலும் நிலத்தை அன்னையாக வழிபடும் வழக்கம் முன்பே இருந்தது, பாரத அன்னை எனும் சட்டகம் சுதந்திர கால உருவாக்கம் என்று நினைக்கிறேன் ( சமீபத்தில் ஜெயமோஹன் இப்படியான ஒரு பார்வையை( பாரத அன்னை- பூமா தேவி ) முன்வைத்தார், அதையொட்டியே இதை சொல்கிறேன் ),  சங்கம் இந்த பாரத அன்னை படிமத்தை முன்னெடுத்து கொண்டு சென்றது,  இந்த படிமம் வழியாக தன் நோக்கை முன்வைத்தது என்று நினைக்கிறேன்.

இந்த நூல் சார்ந்து அது முன்வைக்கும் ஒவ்வொன்றையும் இப்படி முன்வைத்து பேச நிறைய விஷயங்கள் இதில் இருக்கிறது.

ஒரு தன்னலமற்ற முன்னோடியாக தேசம் மீது பற்று கொண்ட ஒருவரராக கோல்வால்கர் மீது இந்த நூல் படித்த பிறகு பெரும் மதிப்பும் மரியாதையும்  உருவாக்கியிருக்கிறது..

Tuesday, May 5, 2020

ஞானகங்கை நூல் முன்வைத்து -1







மதுவிலக்கு கள்ள மதுவியாபாரத்தினை உருவாக்கும்,  எனவே மதுவிலக்கினை நீக்க வேண்டும், இப்படி தடைசெய்து   மது அருந்துதலை நீக்க முயற்சிப்பதை விட  பிரச்சாரம் /விழிப்புணர்வு வழியாக வழியாக மது அருந்துதலின் தீமையை மக்களிடம் எடுத்துரைத்து மது அருந்துதலை நீக்க முயற்சிப்பதே சரியானவழி.  மேலும் இந்த கள்ள மதுவியாபாரிகள் தங்கள் வியாபார ஆதாயத்திற்காக மதுவிலக்கை ஆதரிப்பார்கள்...  இப்படியான வாதங்களை இன்றய காலத்தில் முன்வைப்பவர்களை  முற்போக்குவாதிகள் என்று அழைக்கிறோம்,  அதிலும் இப்படி பேசுபவர்கள்  மதசார்பின்மைவாதிகளாக இருப்பதையும் பார்க்கிறோம்,  ஆனால் மேலே இருக்கும் வரிகளை சொன்னவர் ஸ்ரீ மாதவ சதாசிவ கோல்வால்கர்,  இவர் ஹெட்கேவார் க்கு பிறகு சுமார் 33 ஆண்டு காலம் ( 1940-1973) ராஷ்டிரிய சேவா சங்கத்தின் தலைமை பொறுப்பை வகித்தவர் !

ஞானகங்கை எனும் நூல் பன்ச் ஒப் தாட்ஸ் எனும் நூலின் தமிழாக்கம், கோல்வால்கர் கருத்துக்களின் தேர்தெடுக்க பட்ட தொகுப்பு இது,  ராஷ்டிரிய சேவா சங்கத்தின் ஆரம்ப வரலாறு, வளர்ந்த விதம்,  இந்த சங்கத்தின் நோக்கம், செயல்பாடு போன்றவையை புரிந்து கொள்ள இந்த நூல் மிகவும் உதவும்.

நான் முதலில் இந்த நூலை தேடி படிக்க காரணம் இந்துத்துவம் பற்றி அறிந்து கொள்வதற்க்காகவே, ஆனால் இந்நூலில் கோல்வால்கர் இந்துத்துவம் எனும் வார்த்தையை அல்லது அதை ஒரு கோட்பாடு வடிவத்தில் (இந்துத்துவம் ) பேசவில்லை மாறாக கோட்பாடு (இஸம் ) போன்றவைகளை தவறானவை தேவையற்றவை என கம்யூனிசத்தை மறுப்பதன் வழியாக சொல்லி செல்கிறார். கோல்வால்கர் ராஷ்டிரிய சேவா சங்கத்தின் நோக்கம் என முன்வைப்பது இந்துக்கள் இராஷ்டிரிய பண்பாட்டின் வழி செல்ல வேண்டும் என்பதுதான்,  அப்படி இந்துக்கள் அனைவரும் இராஷ்டிரிய பண்பாட்டின் வழி சென்ற பிறகு ராஷ்டிரிய சேவா சங்கத்தின் பணி தேவையற்றதாகிவிடும் என்றும் கூட சொல்கிறார்.

 இவர் இந்த பண்பாட்டின் குணம் என சொல்வதை என் வாசிப்பு புரிதலின் படி இப்படி சொல்கிறேன், இந்த நிலத்திற்கு என்று ஒரு வாழ்க்கை முறை உண்டு,  இங்கு மனிதனின் புருஷார்த்தம் என்பது அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு.  அறம் வழியில் பொருள், இன்பம் அடைய வேண்டும், வீடு ( முக்தி ) என்பதை தெய்வத்தை அடைவது என்று சொல்லலாம், அதை தெய்வ பக்தி வழியாக அணுகுவதை பற்றி சொல்லி வாழும் தெய்வம் என்பது மனிதர்கள்தான்,  என பிற மனிதர்கள், உயிர்களுக்கு சேவை செய்வதன் வழியாக இறைவனை அணுகுவதே நம் பண்பாட்டின் வழிமுறை என்கிறார்.  இதை ராஷ்டிரிய சேவை எனும் வழியில் விளக்குகிறார்,  அதாவது இந்நிலம் நம் அன்னை,  இந்த அன்னையை  வழிபடுவது என்பது இந்த நிலத்தின் மக்களை தன் சகோதரர்களாக எண்ணி அவர்களுக்கு சேவை செய்வதுதான் என்கிறார்,  இதை விராடபுருஷன் எனும் படிமத்தை பயன்படுத்துகிறார், இந்நிலத்தின் மக்கள் அனைவரும் ஓருயிர்,  ஒற்றை விராடபுருஷன் என. இந்துக்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இந்த எண்ணத்தை உருவாக்குவதே ராஷ்டிரிய சேவா சங்கத்தின் நோக்கம் என்கிறார்.

மேலும் அவர் சொல்வதை இப்படி சுருக்கி சொல்லலாம்.
ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு பிரத்யேக குணம் உண்டு,  அதை அந்த நிலத்தின் பண்பாடு என்று சொல்லலாம்,  இந்தியா ( பிரிவினைக்கு முந்திய ) விற்கு அப்படியான தனித்த பண்பாடு உண்டு, அதுவே நம் ராஷ்டிரிய தேசியத்தின் குணம், இந்தியாவில் ஆட்சிகள், மொழிகள், பழக்கங்கள் போன்றவையில் பன்மை இருந்தாலும் பண்பாட்டு இயல்பு என்பது ஒன்றுதான், அந்த பண்பாடு இந்து பண்பாடு.  இந்த பண்பாடு உலகியல் சுகத்தை தன் நோக்கமாக கொண்டிருக்க வில்லை, மாறாக முக்தியத்தைத்தான் நோக்கமாக கொண்டிருக்கிறது, அதுவே முதல்நோக்கம்,  அதை அடைவதற்கு தகுந்த வாழ்கை முறையையும் இந்த பண்பாடு உருவாகியிருக்கிறது ( அறம் பொருள் இன்பம் வீடு ),  இந்த பண்பாட்டின் படியாகத்தான் இந்துக்கள் வாழ்ந்து வந்தார்கள்,  ஆனால் அந்நிய படையெடுப்புகள்,  ஆட்சிகள் காரணமாக இந்துக்கள் பலரும் தங்கள் பண்பாட்டு சாரத்தினை விட்டு உலகியல் மயக்கத்திற்குள் விழுந்து விட்டார்கள்,  இவர்களிடம் மீதும் இந்து பண்பாட்டின் சிறப்பை உணர்த்தி திரும்ப இந்து பண்பாட்டு வாழ்வியலுக்குள் கொண்டு வருவதே ராஷ்டிரிய சேவா சங்கத்தின் பணி.

கோல்வால்கர் கருத்துக்களை வாசிக்கும் முன்பு இவர் ஒரு துறவி என்பதால்  அந்த வகையான இயல்பை எதிர்பார்த்தேன்,  மாறாக இவர் விலங்கியலில் முதுகலை பட்டம் பெற்றவர் பிறகு சட்டம் படித்திருக்கிறார்,  அதன் பிறகுதான் இராமகிருஷ்ணர் வழிவந்த ஸ்வாமி அகண்டானந்தரிடம் தீக்ஷை பெற்றிருக்கிறார்,  டால்ஸ்டாய், சாலமன் எனும் பெயர்கள் சாதாரணமாக வந்து விழுகின்றன , மேலை நூல்கள் நிறைய பயின்றிருக்கிறார்,  வேதங்களிலும் மிகுந்த ஞானம் கொண்டிருக்கிறார்,  எந்த ஒன்றையும்  நடைமுறை தளத்தில் வைத்து மிக இயல்பாக அணுகுகிறார், ஆனால் பரிவோடு அணுகுகிறார் என்று சொல்லமுடியாது, ராவாக அணுகிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம், முக்கியமாக இஸ்லாம் சார்ந்த விஷயத்தில் இதை நன்றாக உணர முடியும். இதை பற்றி இந்த கட்டுரையின் கடைசியில் சொல்லிவிடுகிறேன்.

கோல்வால்கர் காங்கரசை நிராகரிக்கும் முறை அலாதியானது,  அதை இப்போதைய காந்தியர்கள் அறிந்தால் ஆச்சிரியம் அடைவார்கள், ஏனெனில் காந்தியம் என்பது எதிர்பரசியலுக்கு எதிரானது என்று எண்ணுகிறோம்,  கோல்வால்கர் காங்கரசே வெள்ளையர் எதிர்பரசியலில் வளர்ந்த ஒன்று என்கிறார்,  இந்த நோக்கம் தவிர்த்து பார்த்தால் காங்கரஸ் நோக்கம் என ஒன்றுமில்லாத ஒன்று என்கிறார்,  மாறாக இப்போது ராஷ்டிரிய சேவா சங்கம் முஸ்லீம் வெறுப்பரசியல் கொண்ட ஒன்று என்று நாம் தற்போது எண்ணி வருகிறோம்,  ஆனால் கோல்வால்கர் முஸ்லீம் எதிர்ப்பு வழியான ஒன்றை எதிர் இந்துத்துவம் என்கிறார்,  அது தவறு என்கிறார்,  அதை விளக்க ஒரு சம்பவம் சொல்கிறார்,  அவரை சந்தித்த ஒருவர் பசு கொல்வது என்பது எல்லா மிருகங்களையும் கொல்வதை போன்ற ஒன்றுதான்,  ஆனால் இஸ்லாமியர்கள் பசுவை கொல்கிறனர்,  அதனாலேயே பசுவதையை எதிர்க்கிறேன் என்றிருக்கிறார்,  கோல்வால்கர் இதை தவறான அணுகுமுறை என்கிறார், நம் நோக்கம் என்பது பசுவை காப்பது, அதற்காக மட்டுமே நாம் பசுவதையை எதிர்க்க வேண்டுமே ஒழிய இன்னொருவர் பசுவை கொல்கிறார் என்பதற்காக பசுவதையை எதிர்க்கிறேன் என்று சொல்வது தவறு, அது எதிர்மறை அணுகுமுறை, இப்படியான அணுகுமுறைகள் கூடாது என்கிறார்.

மேலும் இவர்  அமைதியை முன்வைப்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வது இன்னும் சுவாரஸ்யமானது,  ஒரு வலுவானவன் அகிம்சையை அமைதியை முன்வைப்பதற்கும் பலவீனமானவன் முன்வைப்பதற்கும் வித்யாசம் உண்டு, பலமானவன் முன்வைக்கும் அமைதியே மதிக்கப்படும் என்கிறார்,  இதை காந்தியை வைத்து சொல்ல வில்லை, நேருவை முன்வைத்து ( மறைமுகமாக மற்றும் நேரடியாக ) சொல்கிறார், முக்கியமாக சீன போருக்கு முந்திய காலங்கள், பஞ்சசீல கொள்கைகள் என.   போருக்கு பின் தான் சொல்வதே நடந்தது, சீனா நம்மை மதிக்க வில்லை என்று நிறைய சொல்லிசெல்கிறார்,  முக்கியமாக கோல்வால்கருக்கு  இந்தியா மேலும் சிதைந்து விட கூடாது என்ற பதட்டம் இருந்தது,  இந்திய அரசு பலமாக இருக்க வேண்டும், அமைதி, அகிம்சை என்று சொல்லிக்கொண்டிருக்காமல் தைரியமாக செயல்பட  வேண்டும் என்று சொல்வது, இராஷ்டிரிய சேவா சங்கத்தில் ஒற்றுமையை வலியுறுத்தி பேசுவது என இதில் எல்லாம் இந்தியா மேலும் சிதைந்து விட கூடாது எனும் பதட்டதை நன்றாக காண முடிகிறது,  50, 60 காலங்களில் எல்லா தலைவர்களுக்கும் இந்தியா மேலும் உடையும் எனும் எண்ணம் இருக்குமென்று நினைக்கிறன்,  கோல்வால்கரிடமிருந்த ஜாக்கிரதை உணர்வின் வழியாக அந்த் காலத்தின் பொது உணர்வு இதுவாக இருக்கும் என யூகிக்கிறேன்,  நாகலாந்து பிரிவினை முயற்சிகள், கார்மீர் பிரிவினை முயற்சிகள்,  சீன ஆக்கிரமிப்பு,  திபெத் பிரச்னை போன்றவைகளில் இருக்கும் பின்னணிகள்,  சிக்கல்கள்,  அரசின் தவறுகள் போன்றவை பற்றி நிறைய பேசுகிறார்,  அதுவும் முக்கியமாக திபெத்க்கு நாம் துரோகம் இழைத்து விட்டோம் என்கிறார், அதன் சாபம் நமக்கு உண்டு என்கிறார்,  திபெத்தை சீனா ஆக்கிரமிக்க விட்டிருக்க கூடாது என்கிறார். 

அசாம் பிரச்னை பற்றி இவர் சொன்னது முக்கியமானது, அசாமில் பங்களாதேஷ் (அப்போதைய பாகிஸ்தான் ) மக்கள் குடியேறி அசாமை இந்தியாவிலிருந்து பிரிக்க முயன்றனர் என சொல்வது,  அசாமில் வங்காள இந்துக்களும் குடியேறி இருக்கின்றனர்,  ஆனால் அசாமில் குடியேறிய பங்களாதேசிகள் வங்காள இந்துக்களை விரட்டியடித்தனர்,  இதன் வழியாக அசாமில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவானது என்கிறார்,  இது போல பாகிஸ்தானியர்க்கு இந்தியாவை படிப்படியாக இஸ்லாமிய பிடிக்குள் கொண்டுவரும் நோக்கம் உள்ளது என்கிறார்.  நாகலாந்து பிரச்சனையையும் சொல்கிறார், அங்கிருந்த பிரிவினை தலைக்கும் கிருஸ்துவ மிசினரிக்கும் உள்ள தொடர்பு என,  இதில் கிறிஸ்துவம் சார்ந்த கோல்வால்கரின் எண்ணம் சார்ந்த சுவாரஸ்யமான ஒன்று உண்டு, கோல்வால்கர் ஏசுவை மெய்ஞானி என்கிறார்,  கோல்வால்கர் தாக்குவது கிருஸ்துவ அமைப்புகளை மட்டும்தான்,  முதலும் கடைசியுமான நல்ல கிரிஸ்துவர் ஏசு மட்டும்தான் என கோல்வால்கர் சொல்வது இந்த நூலில் இருமுறை வருகிறது ! ( இன்னொருவர் சொன்ன உண்மை வரியாக இதை சொன்னார் ).

தன் நேரடி அனுபவம், மற்றும் உரையாடல் மற்றும் கவனித்தல் வழியாக கிருஸ்துவ பொது பணிக்கு பின்னிருக்கும் நோக்கம் என்பது மதமாற்றம்தான்,  அவர்களது இத்தனை கோடி செலவு பொது பணிக்கு பின்னிருக்கும் ஒரே நோக்கம் இந்த மதமாற்றம் மட்டும்தான் என்கிறார்,  கோல்வால்கர் இதை வெறும் வெறுப்பு நோக்கில் சொல்வதாக எண்ணவில்லை, இது அவரது அனுபவம் வழியாக கண்டுணர்ந்த உண்மை என்பதாகவே நான் கருதுகிறேன்.  மேலும் கோல்வால்கர் மதமாற்றம் என்பது ஒருவரை இந்த நிலத்தின் பண்பாட்டிலிருந்து பிரிப்பது என்கிறார்,  அப்படி பிரிவதன் வழியாக அவர் இந்த நிலத்திற்கும் அந்நியமாகிறார் என்கிறார்,  இது முக்கியமான விஷயமாக நான்  பார்க்கிறேன்,  ஏனெனில் கோல்வால்கர் இஸ்லாமியர்களையும் கிறிஸ்துவர்களையும் இந்து எனும் தளத்தில் வைத்து பார்க்க வில்லை, அவர்களை இந்து பண்பாட்டிற்குள் சொந்த நிலத்தின் பண்பாட்டிற்குள் வர வேண்டும் என்கிறார்,  தனிப்பட்ட ஆன்மீகத்தை தன் சுதந்திரமாக வைத்து, பண்பாடு என்று வரும்பொழுது இந்த நிலத்தின் பண்பாட்டிற்குள் வர வேண்டும் என்கிறார், அப்படி வராத போது தேசம் சார்ந்த அன்பு இல்லாமல் ஆகும் என்கிறார்.

இன்னொரு அவர் சொன்னது முக்கியமாதானதாக பட்டது,  அதாவது பிரிவினைக்கு பின்பு இந்தியாவை நேசிக்கும் இஸ்லாமியர்கள் இங்கேயே இருந்து கொள்ளலாம் என்று தேச தலைவர்கள் சொன்னபிறகு இங்கிருந்த பல இஸ்லாமியர்கள் இங்கேயே இருந்து விட்டனர், ஆனால் அதற்க்கு முன்பு இஸ்லாமிய பிரிவினைக்கு தனி தேசத்திற்கு வாக்கெடுப்பு நடந்த போது பெரும்பாலான எல்லா இஸ்லாமியர்களும் பிரிவினைக்கு தனி தேசத்திற்கு ஆதரவாகவே வாக்களித்தனர்,  பிறகு மிக குறைவான கலாத்திற்குள் திடீரென இந்திய நேசம் எப்படி வந்தது என்கிறார்,  இது எனக்கு படு முக்கியமான கேள்வியாக பட்டது ! கோல்வால்கருக்கு தேசப்பிரிவினையில் சற்றும் சம்மதம் இல்லை,  மிக கடுமையாக எதிர்த்து எழுதியிருக்கிறார் இந்த நூலில்,  12 நூற்றாண்டுகளாக முயன்ற இஸ்லாமிற்கு இலவசமாக பிரிவினை வழியாக இந்த தேசத்தை பிய்த்து கொடுத்தார்கள் என்கிறார்,  இந்த நிலத்தின் ( அகண்ட பாரதம் ) பண்பாடு என்பது இந்து பண்பாடு மட்டுமே என்கிறார்,  அதே சமயத்தில் இஸ்லாமை இந்து மதத்திற்குள் அதன் சாரம் கலந்து இணைந்திருந்தால் ஏற்று கொண்டிருக்கலாம், ஆனால் அது நடக்க வில்லை என்கிறார்.  கோல்வால்கர் ஒரு இடத்தில் உலகில் உள்ள நல்ல விஷயங்களையும் ( தரிசனங்கள், ) இங்கு கொண்டுவந்து சேர்ப்போம் என்கிறார்,  உண்மையில் மேற்பரப்பாக கோல்வால்கரின் கருத்தை பார்க்கும் பொழுது அவர் இஸ்லாமிய எதிர்ப்பாளராக தெரிகிறார், ஆனால் உண்மையில் அவரிடம் மிக தெளிவான தீர்க்க தரிசன பார்வை இருக்கிறது, அவர் முன்வைக்கும் இந்து பயன்பாடு என்பது இந்தியாவின் தொன்மையான பண்பாடு, இந்த பண்பாடு புதிதாக வரும் சாரத்தையும் உள்ளிழுத்து கொள்ளும்,  அனைத்தையும் அரவணைக்கும்,  ஆனால் இந்த பண்பாட்டிற்கு மாற்றாக இன்னொரு பண்பாட்டினை மதம் வழியாக கொண்டு வந்து மாற்றாக முன்வைப்பதை அனுமதிக்கும் பட்சத்தில் முன்னிருக்கும் பண்பாட்டின் ஒருமை குலையும்,  கோல்வால்கர் இஸ்லாமை எதிர்ப்பது இதனால்தான், கோல்வால்கர் பண்பாட்டை அன்னையாக முன்வைப்பதன் காரணமே அந்த பண்பாட்டில் இருந்து பிறழாமல் இருக்க வேண்டிதான் என்று நினைக்கிறேன். ஒண்றிணையாமல் தனித்து நிற்க முயலும் பண்பாடுகள் இந்தியாவை சிதைக்கும் என்ற புரிதல் அவர்க்கு இருந்தது, அதனாலேயே இஸ்லாமை அந்த நோக்கில்தான் எதிர்த்தார் என்று எண்ணுகிறேன்.

கோல்வால்கருக்கு காந்திஜி மீது மதிப்பிருந்தது,  இந்தியாவின் மக்களை நல்வழி படுத்தி கொண்டு சென்றார் என்று கூட சொல்கிறார்,  அவரது புத்திசாலித்தனமான சாதாரணமக்கள் புரிந்து கொள்ளும் செயல்பாடுகள் என கூட சொல்கிறார்,  ஆனால் நேருவின் செயல்பாடுகள் முக்கியமாக அவர் பிரதமராக இருக்கும் சமயத்தில் அவரது செயல்பாடுகள் தவறானவையாக இருந்ததாக அவர் எண்ணுகிறார் என்பதை இந்நூல் வழியாக புரிந்து கொள்கிறேன்,  இதில் நூலில் இருந்த ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது, சீன போருக்கு பின் இரண்டு மாதம் கழித்துதான் போர் சமயத்தில் நாம் கேட்டிருந்த போர் விமானங்களை (2 ) ரஸ்யா அனுப்பி வைக்கிறது, ஆனால் அதுவரை நேசமே இல்லாமல் இருந்த அமெரிக்க மற்றும் இரண்டு ஐரோப்பிய நாடுகள் போர் சமயத்தில் இந்தியாவிற்கு உடனே கொடுத்து உதவி செய்கிறது,  ரஸ்யா மீது கோல்வால்கருக்கு நம்பிக்கை இல்லை,  சீனா மீது சுத்தமாக நம்பிக்கை இல்லை,  அவர்களை நம்பாதீர்கள் என்று அடிக்கடி சொல்கிறார்,  அவையிரண்டும் கம்யூனிச அரசாங்கம் என்பது கோல்வால்கரின் நம்பிக்கையின்மைக்கு முக்கிய காரணம். 

கோல்வால்கர் இந்து பயன்பாட்டின் அடித்தளமாக முன்வைப்பது பிறரை நேசிப்பது,  பிற உயிர்களை தெய்வத்தின் சாயலாக எண்ணி பூஜித்து சேவை செய்வது ( இப்போதும் இயற்கை இடர்கள் சமயத்தில் சங்கத்தின் சேவைகள் மிகுதியாக  இருப்பதை பார்க்க முடியும் ).  மேலும் இந்து பண்பாட்டில் தன் தேவைக்கு மீது ஆடம்பராக இருப்பது பிழை,  தேவை மீது நம்மிடம் இருப்பது பிறருக்கு சேவை செய்வதற்காகவே.  இந்த பண்புநலனைதான் கோல்வால்கர் இந்த நிலத்தின் பண்பாடாக முன்வைக்கிறார். 
பொதுவுடைமை வாதம்,  ஜனநாயகம் இரண்டையும் குறைகள் கொண்டதாகவே சொல்கிறார்,  காந்திஜி முன்வைக்கும் தர்மகர்த்தா வழிமுறையில் கூட தவறுக்கான சாத்தியத்தை சொல்கிறார்.
கம்யுனிஸத்தில் அவர் முன்வைக்கும் குறைகள் எல்லாமே இப்போது கண்முன் காண முடிவதை பார்க்க கோல்வால்கரை ஒரு தீர்க்கதரிசி என்றே சொல்ல தோன்றுகிறது, இப்போது நாம் பார்க்கும் கம்யூனிசத்தின் பிழைகள் யாவையும் ஒன்றுவிடாமல் இந்த நூலில் சொல்கிறார்.  ஒரு உதாரணத்தை சொல்லலாம், கோல்வால்கர் வருமான வரி விதிப்பை எதிர்மறையான ஒன்று என்ற விதத்தில் பார்க்கிறார், இப்படியான வரிகள் சம்பாதிப்பதற்கான ஊக்கத்தை குலைக்கும் என்கிறார்,  அதற்கு மாறாக கட்டுப்பாடுகள் இல்லாமல் செல்லவிட்டு பிறகு நெறிப்படுத்தலாம் என்கிறார், உலகப்போருக்கு பின்பு வீழ்ந்த ஜெர்மன் தன் கட்டுப்பாடுகளை தளர்த்தி கொண்டதால் பொருளாதாரத்தில் பெரிதாக வளர்ந்தது என்கிறார்.
கோல்வால்கரிடம் இருந்த ஒரு பழமை வாதம் என நான் எண்ணுவது வலிமை மீதான அவரது ஆராதனைதான்,  அதுவே ஆண்மை என்கிறார்,  இந்நூலில் பல பக்கங்கள் அதற்காகவே எழுதி இருக்கிறார், வலிமை மட்டுமே துணை, அதுவே நம்மை காக்கும் என்பதை வலியுறுத்தும் எழுத்துக்கள்,  காந்தி வலிமை எனும் ஒன்றினை சத்தியத்தின் வழியாக பார்க்கிறார், அடைந்தார் என்று சொல்லலாம்,  ஆனால் கோல்வால்கர் என் நோக்கில் நடைமுறைதனத்தின் வழியாக மனிதனின் மனம் செயல்படும் இயல்பு அறிந்த பார்வை கொண்டவராக இருக்கிறார், அதனாலேயே வலிமையை முன்வைக்கிறார்,  காந்தி தோற்ற இடம் என நான் கருதுவது பிரிவினைதான், இஸ்லாமியர்கள் பிரிந்து போக மாட்டார்கள் என நினைத்தார்,  அந்த சூழ்நிலையில் தன் நம்பிக்கை பொய்ப்பதை எதிர்கொள்ள முடியாமல் தோற்றார், கோல்வால்கர் இந்துக்கள் வலுவோடு இருந்திருந்தால்,  பண்பாட்டு உருவாகியிருக்கும் ஆண்மையோடு இருந்திருந்தால் இந்துக்கள் பிரிவினையை ஏற்றிருக்க மாற்றார்கள்,  அன்னையை பிளப்பதை அனுமதிக்க மாட்டார்கள் என்கிறார்,  அதனாலேயே இனியாவது இந்துக்கள் இந்து பண்பாட்டின் ஆண்மையோடு இருக்க வேண்டும் என்று நூல்முழுதும் சொல்கிறார்.







ஆசிரியர் ( சிறுகதை )

 90 ஆண்டு கால கட்டடம் அது, செங்கல்க்கு பதில் கற்கள் அடுக்கி கட்டப்பட்டிருக்கும், மேலே ஓட்டு கூரை, சுவர் உயரம் எப்படியும் 15 அடி வரும், கற்கள...